வீட்டில் எப்போதும் ஆரோக்கியமும் செல்வமும் நிலைத்திருக்க, வாஸ்து தரும் 12 வழிகாட்டல்கள்!
கடனும் நோயும் இல்லாத வாழ்வே மிகச்சிறப்பானதாகும். அவ்வகையில், ஓர் இல்லத்தில் ஆரோக்கியமும் செல்வமும் என்றென்றும் நிலைத்திருக்க வாஸ்து சாஸ்திரம் சொல்லும் எளிய 12 வழிகாட்டல்கள் இங்கே உங்களுக்காக!
1. சொந்த வீடோ, வாடகை வீடோ வெளிச்சமும் காற்றும் நன்கு வரும்படியான வீட்டைத் தேர்வு செய்யுங்கள். இப்படியான வீடுகளில் எப்போதும் லட்சுமி வாசம் செய்வாள். வாடகை குறைவு என்பதற்காக வெளிச்சோட்டம் இல்லாத வீட்டைத் தேர்வு செய்துவிட வேண்டாம்!
2. அனுதினமும் காலையும் மாலையும் வீட்டில் அவசியம் விளக்கேற்றி வழிபடுங்கள். தீபச்சுடர் பரப்பும் ஒளியானது வீட்டில் நேர்மறை அதிர்வுகளை உண்டாக்கும்.
3. துர்நாற்றம் விளைவிக்கும் பொருள்களை உடனுக்குடன் அப்புறப் படுத்திவிடுங்கள். வீட்டில் எப்போது நறுமணம் கமழும்படி தூபங்கள், வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தலாம்.
4. வாஸ்துபடி பணம் எப்போதும் ஒருவரின் கையில் தவழ்ந்து கொண்டிருக்க வேண்டு மென்றால் வீட்டின் வடக்குச்சுவர் ஜன்னலு டன் இருக்க வேண்டும். ஜன்னல் எப்போதும் திறந்தே இருக்கவேண்டும். காற்றோட்டமும் சூரியவெளிச்சமும் வாஸ்து சாஸ்திரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால், ஜன்னல்கள் திறந்திருப்பது நல்லது.
5. வீட்டில் பணம் சேருவதற்கு வடக்கு திசையும் ஜன்னலும் எந்த அளவு முக்கியமோ அந்த அளவு தென் மேற்கு திசை முக்கியம். இங்குதான் நாம் பணத்தை வைக்க வேண்டும். வடமேற்கு மூலையில் பணத்தை வைக்கக் கூடாது. எவ்வளவு சிறிய வீடாக இருந்தாலும் வீட்டின் தென்மேற்கு அறையில் கிழக்கு அல்லது வடக்குப் பார்த்து ஒரு பீரோவை வைத்து, அதில் பணம் வைத்துப் பயன்படுத்துங்கள்; செல்வ வளம் சிறப்பாக இருக்கும்.
6. தண்ணீர் அதிகம் செல்வழியும் வீட்டில் லட்சுமிகடாட்சம் நீங்கி விடும் என்பார்கள். ஆகவே, இயன்றவரையிலும் நீர் வீணாவதைத் தடுக்கப் பாருங்கள். அதேபோல், வீட்டில் பயன்படுத்தப்பட்ட நீர், வீட்டில் விழும் மழை நீர் ஆகியன வடக்கு, வடகிழக்கு மற்றும் கிழக்கு திசை வழியே வெளியேறும்படி தரை மட்டம் அமைந்திருப்பது சிறப்பு. அதற்கேற்ப, இயன்றவரையிலும் வீட்டின் குளியலறையை கிழக்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு பாகத்தில் அமைப்பது நல்லது. இதனால் ஆரோக்கியமும் மனோபலமும் சிறப்பாக இருக்கும்.
7. அக்னியின் முக்கியத்துவத்தைப் பல்வேறு ஞானநூல்கள் விவரிக்கின்றன. சமையலுக்கும் அக்னியே பிரதானம். அக்னிக்கு உரிய திசை தென்கிழக்கு. அவ்வகையில் வீட்டின் தென்கிழக்கு பாகத்தில் சமையலறையை அமைப்பது சிறப்பு.
8. ஒரு வீட்டின் கதவுகள் எப்படி அமையவேண்டும் என்பது பற்றியும் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. மூடி இருக்கும் கதவைத் திறந்தால், அது அசையாமல் அப்படியே நிற்க வேண்டும். அப்படி நின்றால், சகல நன்மைகளுடன் நீடூழி வாழலாம். திறக்கும் கதவானது பெரும் இரைச்சலுடன் தானாகவே மூடிக் கொள்ளு மானால், துன்பகரமான சம்பவங்களே நிகழும். கதவைத் திறக்கும்போதும் மூடும்போதும் பெருத்த சப்தம் ஏற்பட்டால், அது அந்த வீட்டின் தலைவனுக்கு ஆகாது. எனவே சத்தம் எழாத வகையில் கதவுகளைப் பராமரிப்பது அவசியம்.
9. ராசி அடிப்படையிலும் சில வழிகாட்டல்களை விவரிப்பார்கள். மேஷம், சிம்மம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் வடக்கு நோக்கி தலைவாசல் அமைந்த வீட்டில் வசிப்பது சிறப்பு. ரிஷபம், கன்னி மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு தெற்கு நோக்கிய வாசல் உள்ள வீடு அதிர்ஷ்டம் தரும். மிதுனம், துலாம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் மேற்கு நோக்கிய தலைவாயில் அமைந்த வீடு நன்மை தரும். கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசிக்காரர்கள் கிழக்கு நோக்கித் தலைவாசல் அமைந்த வீடுகளில் வசிப்பது விசேஷம். இதனால் நோயற்ற வாழ்வு, ராஜ யோகம், வம்ச விருத்தியுடன் வளமாக வாழலாம்.
10. அதேபோல், குறிப்பிட்ட ராசிக்காரர்கள் ஊரின் குறிப்பிட்ட பாகத்தில் உள்ள வீடுகளைத் தவிர்க்கவேண்டும்.
மேஷம்: ஊரின் வடக்குப் பக்கம் வீடு அமையக்கூடாது
ரிஷபம், மிதுனம், சிம்மம், மகரம்: ஊரின் மையப்பகுதியில் வீடு அமையக் கூடாது
கடகம்: தெற்குப் பகுதியில் வீடு அமையக்கூடாது.
கன்னி: ஊரின் தென்மேற்கில் வீடு அமையக்கூடாது.
துலாம்: ஊரின் வடமேற்குப் பகுதி கூடாது.
விருச்சிகம்: ஊரின் கிழக்குப் பகுதி கூடாது.
தனுசு: ஊரின் மேற்குப் பகுதி கூடாது.
கும்பம்: வடகிழக்கில் வீடு அமையக் கூடாது.
மீனம்: தென் கிழக்குப் பகுதி ஆகாது.
11. பொதுவாக எல்லோருக்குமே தெருக்குத்து வீடு ஆகாது. அதேபோல் கிழக்கு, வடக்கு உயர்ந்தும், தெற்கு மேற்கில் தாழ்ந்தும் உள்ள வீடுகள் ஆகாது. தென்மேற்கில் ஆழ்குழாய்க் கிணறு, தொட்டி உள்ள வீடுகளைத் தவிர்க்க வேண்டும். அக்னி மூலையில் கழிப்பறை இருக்கக்கூடாது. வீட்டின் தரை மற்றும் சுவர்கள் பெயர்ந்தோ வெடிப்பு விட்ட நிலையிலோ இருக்கக் கூடாது.
12. வீட்டின் வாயில்கள் எண்ணிக்கை இரட்டைப் படையில் இருக்க வேண்டும். 3 அல்லது 5 எனும்படி அமைந்திருந்தால், மேற்கு அல்லது தெற்குப் பகுதியிலுள்ள ஒரு கதவைப் பயன்படுத்தாமல் மூடி வைக்கலாம்!
கருத்துகள் இல்லை