இந்திய வல்லாதிக்க சூழ்ச்சிகளில் இருந்து நாட்டை பாதுகாப்போம்!
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் அண்மித்துள்ள வேளையில் இந்திய வல்லரசும் அதன் முகவர்களும் தாம் ஆதரவளிக்கும் வேட்பாளர்களாகிய ரணில் அல்லது சஜித் வெல்லுவதை உறுதி செய்வதற்கு மிகவும் கேவலமான சூழ்ச்சிகளில் இறங்கியுள்ளனர். அத்துடன் இலங்கையை சுரண்டும் அதானியின் காற்றாலை திட்டத்தை தான் பதவிக்கு வந்தால் நிறுத்துவேன் என்று அனுர தெரிவித்து இருப்பது மோடி மற்றும் இந்திய முகவர்களின் வயிற்றில் புளியை கரைத்து உள்ளது (இணைக்கப்பட்டுள்ளது)
.ஊழலுக்கு எதிரான அலை தென் பகுதியில் தீவிரமாக வீசுவதால் நேரடியாக முதல் சுற்றில் அனுரவே அதிக வாக்குகளை பெற போகிறார் என்று அறிந்து கொண்ட இந்திய முகவர்கள் புள்ளடி போட்டு முதலாம் சுற்றுடன் ஜனாதிபதியை தெரிவு செய்யும் முறையை தவிர்க்க தீவிரமான சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக ஐக்கிய தேசிய கட்சி என்ற பெயரில் முதலாம் வாக்கை ரணிலுக்கு செலுத்தி இருந்தால் இரண்டாம் வாக்கை சஜித்துக்கும் அல்லது சஜித்துக்கு முதலாம் வாக்கை செலுத்தி இருந்தால் இரண்டாம் வாக்கை ரணிலுக்கும் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது (இணைக்கப்பட்டுள்ளது ).
இது போலவே இன்று கிளிநொச்சி நகரில் நின்ற போது தற்செயலாக ஒலிபெருக்கி மூலம் புள்ளடி போடவேண்டாம் என்றும் முதலாம் இரண்டாம் விருப்பு வாக்குகளை செலுத்துமாறு கோருவதை அவதானித்தேன். அதாவது முதல் சுற்றில் அதிகளவு வாக்குகளை அனுர பெற்றாலும் 50% வாக்கை பெற முடியாவிட்டால் இரண்டாம் விருப்பு வாக்குகளை கணக்கிடுவதன் மூலம் ரணில் அல்லது சஜித்தை வெல்ல வைக்கலாம் என்று இந்திய முகவர்கள் திட்டம் தீட்டியுள்ளனர்.
ஏற்கனவே தமிழ் பொது வேட்பாளரை கொண்டு வந்து அதன் மூலமாக அரசாங்கத்துக்கு எதிரான வாக்குகளை திசை திருப்பி இரண்டாம் விருப்பு வாக்கை ரணிலுக்கு அளிக்குமாறு இந்தியாவின் கைக்கூலிகளான டெலோ முகவர்கள் கோவிந்தம் கருணாகரன் முதலானோர் கோரியிருந்ததை நான் காணொளி ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி இருந்தேன். உண்மையில் சங்கு சின்னத்துக்கு வாக்களிப்போர் தமிழரின் ஒற்றுமையை உலகுக்கு காட்டுவதாயின் புள்ளடியை தடுத்து விருப்பு வாக்களிக்குமாறு கோருவது ஏன்?
இதன் இன்னொரு கட்டமாக யாழ் பல்கலைக்கழக சமூகம் என்ற பெயரில் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு யாழ் பல்கலைக்கழகத்தினுள் பல்வேறு மட்டங்களிலும் இருக்கும் ரணிலின் மூலம் நன்மை அடைந்தவர்களும் இந்திய முகவர்களும் கோரியுள்ளனர் என்பதை யாழ் பல்கலைக்கழகத்தின் நீதிக்கும் மனித உரிமைகளுக்கான அமைப்பு வெளிக்கொண்டு வந்துள்ளது. கடந்த சில வருடங்களாக மோடியின் தீவிர ஆதரவாளரும் சட்ட ஆலோசகருமான சுரனா யாழ் பல்கலைக்கழகத்தில் சட்ட மாநாடு என்ற பெயரில் பல மில்லியன்களை செலவழித்து பலரை விலைக்கு வாங்கியதை நான் ஏற்கனவே அம்பலப்படுத்திய சூழ்நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
13 வது திருத்தத்துக்கு மேல் தமிழர்களுக்கு எதுவும் கிடைக்காது கிடைக்கவும் அனுமதிக்க மாட்டோம் என்று இந்தியா தெரிவித்துள்ள நிலையில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ரணிலும் சஜித்தும் தமிழருக்கு எதை தர போகிறார்கள் என்று அவர்களுக்கு வாக்களிக்குமாறு தமிழீழம் மற்றும் சமஸ்டி தீர்வை முன்வைத்த தமிழ் கட்சிகள் கோருகின்றன?. ஏற்கனவே அரசியல் அமைப்பில் காணப்படும் 13 வது திருத்தத்தை தாம் பதவிக்கு வந்தால் முழுமையாக அமுல்படுத்துவோம் என்று தெரிவித்து இருப்பது இவர்கள் இதுவரை பதவியில் இருந்த காலத்தில் அதை ஏன் செய்யவில்லை என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.
குறைந்த பட்சம் இலங்கையை மதசார்பற்ற நாடாக அனைத்து மதங்களையும் சமத்துவமாக நடத்துவோம் என்று அனுர தெரிவித்ததை கூட சஜித்தும் ரணிலும் செய்யவில்லை. ஒரு புறம் ரணில் பொருளாதாரத்தில் கூட மதவாதத்தை விட்டுவைக்காமல் தேரவாத பொருளாதாரம் பௌத்தர்களுக்கான பல்கலைக்கழகம், நூதனசாலை என்று பலவழிகளிலும் மதவாதத்தை ஊக்குவிக்கிறார். மறுபுறம் சஜித் மேலும் 1000 விகாரைகளை கட்டுவேன் என்று தமிழர் வாழும் பிரதேசங்களை இலக்கு வைத்துள்ளார்.
இதேவேளை தேர்தலின் பின்னர் பாராளுமன்ற தேர்தல் வருவதற்கு முன்னர் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து பெரும் குழப்ப நிலையை உண்டுபண்ணும் பல்வேறு அறிவிப்புகள் நாள்தோறும் ஆட்சியாளர்களினால் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.
பெரும்பாலான மக்களின் ஊழலை ஒழிக்கும் விருப்பத்துக்கு மாறாக சூழ்ச்சி செய்து ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் மக்கள் புரட்சி வெடித்து இரத்தக் களரியுடன் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதை வரலாறு காட்டுகிறது. அகிம்சையை உலகுக்கு போதித்த புத்தர் காந்தி போன்றோர் உருவாகிய இந்தியாவின் இன்றைய வல்லாதிக்க வெறி இவ்வாறான ஒரு வன்முறைக்கு இட்டுச் செல்வதை முழு உலகமும் மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா ஏற்கனவே இதை உணர்ந்து தனது பிரஜைகளுக்கு பாதுகாப்பு ஆலோசனையை வழங்கியுள்ளது.
இந்தியாவின் வல்லாதிக்க சூழ்ச்சிகளை தடுக்க இன மத பேதமின்றி அனைவரும் ஒன்றுபட்டு எமது வாக்குகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவோம்
நன்றி
Dr முரளி வல்லிபுரநாதன்
16.9.2024
கருத்துகள் இல்லை