தேசத்தின் விடுதலை ஒன்றே தமிழீழ தேசிய மாந்தர்களாகிய எமது இலக்கு!📸

 


அன்பான உறவுகளே!


தேசத்தின் விடுதலை ஒன்றே தமிழீழ தேசிய மாந்தர்களாகிய எமது இலக்கு!


இந்த இலக்கு நோக்கிய பயணத்தில் ‘ஒவ்வொரு களமும் எம் இனத்தின் விடுதலைக்காகப் போராடும் வலிமை மிக்க களங்களாக இருக்க வேண்டும்!’ என்ற நோக்கில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றிக்காக ஒன்றுபட்டுக் குரல்கொடுத்தோம்!


இன்று…



தேர்தலிற்காக நிறம் மாறி உதிரிகளாகக் களம் இறங்கியோர், அரச ஒத்தோடிகள், இந்நபர்களிற்காகப் பொங்கும் கணவாய்க் குருவிகள், தம்மைப் போராளிகள் என அரசியல் செய்வோர், ஊழல் செய்து மக்களை ஏமாற்றிய அரசியல்வா(வியாதி)கள் என வீட்டுக்குள் படுத்திருந்து தேர்தல் 

 முடிவுக்காக பலரும் காத்திருக்கையில்…


 மக்களிற்காக அன்றும் இன்றும் என்றும் போராடும் உணர்வாளர்களான கஜேந்திரகுமார், செல்வராஜா கஜேந்திரன் வழியிலான தமிழ் தேச மக்கள் முன்னணி அணியினர், 


மக்களோடு மக்களாகச் சென்று மண் மீட்புக்காக சட்டவிரோத விகாரைக்கு எதிராக மண்ணிலிறங்கி அடுத்த களத்தில் மக்களிற்காகப் போராடுகின்றனர்!


*”இவர்கள்தான் தேர்தல் வெற்றி தோல்விக்கு அப்பால் மக்களிற்கான உண்மையான தொண்டாற்றும் உண்மைப் பிரதிநிதிகள்!”*


*“மக்களிற்கான சரியான பிரதிநிதிகள் தமிழ்த்தேச மக்கள் முன்னணியினர் மட்டுமே!”*



 எனப் ‘புலத்திலுள்ள தாயக உணர்வுள்ள ஊடகவியலாளர்களோடு நானும் இணைந்து கடந்த சில நாட்களாக உரத்துக் கோடிட்டு உண்மையைச் சொல்லி எம் தேசியக் கடனை ஊடகவியலாளர்களாகப் புலத்திலிருந்தும் சரியாக ஆற்றினோம்!’ என்ற நிமிர்வும் மனநிறைவும் இன்று மகிழ்ச்சி தருகிறது!


தன் நெஞ்சும் பொய்யற்று, எம் தாயக மக்களிற்கும் மெய்யானவர்களைச் சுட்டிக் காட்டி எம் மக்களிற்கு உண்மையான ஊடகவியலாளர்களாக வலிமையாகப் பயணித்த ஒவ்வொரு ஊடகவியலாளர்களுக்கும், ஊடகங்களாகச் செயற்பட்டு வலுச்சேர்த்த அனைத்து தமிழ்த் தேசிய உணர்வாளர்களிற்கும் என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்!


உங்கள் ஒற்றுமையான குரலிற்கு இந்தக் களம் போதிய வெற்றிகளை ஒருவேளை தராது போனாலும் தமிழ்த் தேசிய மாந்தராக எம் தேச நலனிற்காக புலம் நிலத்தை இணைத்து உறவுகளைப் பிணைத்து தேசிய மாந்தராகத் திரண்டு எழும் பெரு வெற்றிக்கான கருத்துக் களம் வெற்றிகரமாகத் திறக்கப்பட்டதே மாபெரும் வெற்றி!


அதற்குக் களம் உருவாகக் காரணமான தமிழ்த்தேச மக்கள் முன்னணிக்கு பெரும் நன்றியும் பாராட்டுக்களும்!


எத்தனையோ சூழ்ச்சியாளர்கள், எத்தனையோ தடைகள், அத்தனை எதிர்ப்புகளையும் கடந்து களத்தில் நின்ற கஜேந்திரகுமார் தலைமையிலான ஒவ்வொரு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர்களும் கொள்கை வழி நிற்கும் பெருவெற்றியாளர்களே!


உங்களிற்கு என் பாராட்டுக்களும் வாழ்த்தும் தேர்தல் முடிவுகள் வர முன்பான இந்தப் பொழுதில் இப்பொழுதே உரித்தாகட்டும்!


உணர்வுள்ள ஊடகவியலாளர்களாக நாம் மக்களின் நன்மையை நாடி மக்களிடம் உண்மையைச் சொல்லிவிட்டோம்.


இன்று தாயக மக்கள் தங்கள் தலைவிதியை எப்படி எழுதியுள்ளார்கள் என இனி இன்றைய தேர்தல் முடிவுகள் எடுத்துச் சொல்லும்!


“இந்த வெற்றி தோல்விகளைக் கடந்து மக்களிற்காகத் தொடர்ந்தும் உண்மையாகப் போராடுவார்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்!” என்பதையும் மீண்டும் உறுதியாகச் சொல்கின்றேன்! 


அதுதான் உண்மையான கொள்கைக்கான வெற்றி!


“வீழ்ந்தாலும் எழுந்தாலும் மக்கள் நலம் நாடியே என் போன்ற ஊடகத் தோழமைகளும் உண்மைக்கான ஊடகங்களாகச் செயற்படும் உணர்வுள்ள தமிழ்த் தேசிய உறவுகளும் தொடர்ந்தும் குரல் கொடுப்போம்!” என இந்தக் கார்த்திகை மாதத்தில் கல்லறைமேனியர் மேல் உறுதி எடுத்துச் சொல்கிறேன்!


எங்கள் தமிழும் தமிழீழ மண்ணும் என்றும் இரு விழிகள்!


அன்புடன் 

உங்களில் ஒருத்தி

சிவவதனி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.