யார் கடத்தியது? கப்பம் கேட்டது? என்பதும் தலை நகர் அரசியல் தமிழ் தலைமைகளும்!
பிள்ளையானைப் பற்றி எதைச் சொன்னாலும் நம்பும் தமிழ் சமூகம் ஏன் "ஈஸ்டர்" தாக்குதலை பிள்ளையான் செய்தார் என்பதை முழுமையாக நம்புவதில்லை என ஒருவர் பேஸ்புக்கில் ஆதங்கப்பட்டிருந்தார். அது என் சிந்தனையைத் தூண்டியது. மேம்போக்காகப் பார்த்தால் சரியான கேள்விதான். ஆனால் அதை உண்மைகளுடன் சீர்தூக்கிப் பார்ப்போமா? ஈஸ்டர் தாக்குதலை சஹ்ரான் செய்தான் என்ற சாட்சிகள் இருந்தும் உங்கள் மனது இன்னும் சூத்திரதாரிகளைத் தேடுவதைப்போலத்தான், சஹ்ரானைப் போலவே பிள்ளையானும் வெறும் அம்பாகவே இருப்பார், ஏ1 சூத்திரதாரி அல்ல. அதுதான் என்னைப் பொறுத்தவரையில் உண்மை. இது பிள்ளையானை ஆதரிக்கும், அல்லது காப்பாற்றும் பதிவுமல்ல, ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையான் குழு சம்பந்தப்பட்டிருக்கலாம் என நானும் உறுதியாகவே நம்புகின்றேன். ஆனால் அப்படி நடந்திருந்தால் பிள்ளையானும் ஒரு "அம்பு" மட்டுமே என்பதுதான் என் தாழ்மையான கருத்து.
போர் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கும் போது March 10, 2009 இல் தெற்கிலங்கையில் நடந்த "அக்குரஸ்ஸ" தற்கொலைக் குண்டுத்தாக்குதல் விடுதலைப் புலிகள் கணக்கில் சேர்க்கப்பட்டது, ஆனால் அது அவர்களால் நிகழ்த்தப்பட்டது அல்ல என்பது பலருக்குத் தெரியும், அத்தாக்குதலில் காயமடைந்த பவுசி, மஹிந்த விஜேசேகர போன்றோருக்குமே அது யாரால் நிகழ்த்தப்பட்டது என்பது தெரிந்திருக்கும்.
அதுபோல அடுத்த ஜனாதிபதி கனவு கண்டு தான் பிறந்த கத்தோலிக்க மதத்திலிருந்து உத்தியோகபூர்வமாக தன்னை பௌத்தத்துக்கு மாற்றிக் கொண்டு, கட்சிக்குள் ராஜபக்சக்களுக்கு சவால்விடுத்துக் கொண்டு, விடுதலைப் புலிகளுடனும் தொடர்பில் இருந்த ஜெயராஜ் பெர்ணாந்துபுள்ளை என்ற தமிழரை 6 April 2008 இல் தற்கொலைதாரியை அனுப்பி கொல்லும் அளவுக்கான தேவை விடுதலைப் புலிகளுக்கு இருந்திருக்காது என்பதே என் நம்பிக்கை.
சமகாலத்தில் இலங்கை அரச தரப்புடன் விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து வந்த கருணா மற்றும் பிள்ளையான் தரப்பு உறவு கொண்டாடியது. அந்த உறவு தேசிய நலன் சார்ந்து இன்றும் சம்பளப் பட்டியல் வங்கியில் வைப்பிலிடப்பட்டுக் கொண்டு பாதுகாப்புத்தரப்பினருடன் தொடரத்தான் செய்கிறது. இனி, மேற் சொன்ன தாக்குதல்களை யார் செய்திருப்பார்கள் என்பதை நீங்கள் ஆராய்ந்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.
போர் முடிந்த கையோடு விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி, மற்றும் நிதிப் பரிவர்த்தணைகளுக்கு உதவிய கொழும்பு வாழ் தமிழ் வர்த்தகர்கள் குறி வைக்கப்பட்டார்கள், கடத்தப்பட்டார்கள். சிலர் இன்றுவரைக்கும் காணமலும் ஆக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை யார் கடத்தியது? கப்பம் கேட்டது? என்பதும் தலை நகர் அரசியல் தமிழ் தலைமைகளுக்கும் தெரியும். ஆனால் அதை சட்டபூர்வமாக நிரூபிக்கும் ஆவணங்களோ அல்லது சாட்சிகளோ இல்லை, இருந்தாலும் அவர்கள் சாட்சி சொல்லவும் வரமாட்டார்கள்.
தமிழர்கள் பட்டியல் முடிந்ததும் கொழும்பு வாழ் இஸ்லாமிய வர்த்தகர்களின் பட்டியலைக் கையில் எடுத்தவர்கள், அவர்களிலும் பலர் இன்றும் திருடனை தேள் கொட்டியதைப் போல அடக்கித்தான் வாசிக்கின்றார்கள். போர் நிறைவுற்ற இந்த ஒன்றரை தசாப்த்த காலத்தில், தமிழ் பேசும் மக்கள் கைகளில் இருந்த மாபியாக்கள் உட்பட பெரு வர்த்தகங்கள், இன்று யார் கைகளில் இருக்கிறது? அவை எவ்வாறு கைமாறின? எப்படி இவை நடந்தது என்பதை தேடிப் பார்த்தால் இன்னொரு பூதம் வெளியே வரும்! ஆம் அது அரச ஆதரவு குண்டர் குழுக்கள்.
2009 போரின் போது வகை தொகையின்றி மக்கள் கொல்லப்படுவதற்கு "போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்" என்று நியாயம் கற்பித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, அதே போர் அமைதியாக்கப்பட்ட பிறகும் பயங்கரவாதம் தலை தூக்காமல் இருக்கவென்று சட்டரீதியற்ற கொலைகளும் கப்பம் கோரல்களும் நடந்து கொண்டிருந்த போது, இந்த நம்பிக்கைக்குறிய மாபியாக்களின் உதவி அரச தரப்புக்குத் தேவையாக இருந்தது, இவர்களின் அடாவடிகள் அரச தரப்பால் "சிங்கள தேசிய" நலன் காக்க அமைதியாக வேடிக்கை பார்க்கப்பட்டது. இப்போது அந்தக் கும்பல்கள் அரச தரப்புக்கே சவால்விடும் அளவுக்கு பாதாள உலக் கோஷ்டிகளாக வளர்ந்து நிற்பதோடு மட்டுமல்லாமல் உலகிலேயே பொலிஸ் மா அதிபரையே தேட வேண்டிய பொறுப்பு பொலிசுக்கே வந்த வேடிக்கையும் நடந்தேறியது. கொழும்பை கேந்திர மையமாகக் கொண்டியங்கிய மாபியாக் குழுக்கள் தெற்கில் மையங் கொண்டமைக்கு ஆளும் அரச தரப்பின் செல்லப் பிள்ளைகளாக அவர்கள் கடந்த காலங்களில் செயல்பட்டிருந்தனர் என்பதே காரணம்.
இனி, ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு வருவோம். இத்தாக்குதலானது பிராந்திய ஏகாதிபத்தியத்தை கட்டமைப்பதற்காக கட்டங்கட்டமாக, கட்டமைக்கப்பட்ட ஒரு சிலந்தி வலையில் சிக்கிய பூச்சிகளான மூளைச் சலவை செய்யப்பட்ட சஹ்ரான், பௌத்த தேசியவாதத்தை கக்கும் "காவி" தரித்த காடையர்கள், சிலந்தியின் செல்லப்பிள்ளையாக தானும் ஒரு சிலந்திதான் என நம்பிக் கொண்டு அவர்களின் தூண்டுதலிலேயே ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக புத்தகமும் வெளியிட்ட பிள்ளையான் போன்ற சில பூச்சிகள் மட்டுமல்லாமல், தம் சமூகத்துக்குள் வளர்ந்து வந்த நச்சுச் செடிகளை வேறுடன் பிடுங்கெறியத் தவறிய அரசியல், மற்றும் ஆண்மீகத்தலைமைகள் மட்டுமல்லமல், கஞ்சா கோப்பிக்காக சஹ்ரான் கொலையாயுதத்தை கையிலெடுத்த போது கண்டுகொள்ளாமல் மௌனம் காத்த ஊரார், ஊடகவியலாளர்கள் என சொல்லிக்கொள்ளும் நாம் என்று சிலந்தி வலைப் "பச்சை"ப் பூச்சிகளின் பட்டியலும் நீண்டு கொண்டே போகிறது.
அந்த சிலந்தி வலையில் சிக்கிய பூச்சிகள் சில இறந்தும், சில இன்னும் உயிருக்காக போராடிக் கொண்டும் இருக்கின்றன, அவற்றில் சாரா புலஸ்தினி, சொனிக் சொனிக், அபூ ஹிந்த் போன்றவர்களும் வெறும் பூச்சிகள் என்பதுவே என் கணிப்பு. வேடிக்கை என்னவென்றால், அந்த சிலந்தி வலையில் சிக்கிய இன்னொரு பூச்சிதான் இன்று ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியை அடையாளம் காட்டப் போகிறதாம். அந்தப் பூச்சிக்கும் நன்றாகவே தெரியும் வலையைப் பிண்ணிய சிலந்தியை அடையாளம் காட்டினால், தன் கதியும் அதோ கதியென்று! அதனால் சில பூச்சிகள் பல பூச்சிகளை காப்பதற்காக காவு கொடுக்கப் படலாம்.
இந்த சதிவலையில் சிக்கிய "அம்பு"களின் சமூகம் சார்ந்த இன்னும் ஒரு சிறு பூச்சியாக, ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட அனைத்து உயிர்களிடமும், அவர்கள் உறவுகளிடமும், காயம் பட்ட சகோதர சகோதரிகளிடமும் மன்னிப்பை யாசிக்கின்றேன்.
- இக்கருத்துக்களை பலர் ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள். ஏற்றுக் கொள்ளாதது போல நடிப்பார்கள்! ஆனால் அவர்களின் மனச்சாட்சிக்குத் தெரியும் உண்மை எதுவென்று.
ஷர்தார் ஜமீல் .
19.04.2025
கருத்துகள் இல்லை