நளாயினிக்கு பிடித்தமான தேசிக்காய்.!!
எங்கட நாளாயினியைப் பற்றி கூறுவதாக இருந்தால் பலவிடயங்கள் கூறிக்கொண்டே போகலாம்.ஆனால் பலவற்றை தவிர்க்க வேண்டும் என்பதற்காக சிலவற்றை மட்டும் எழுதிக்கொள்கிறேன்.
எங்கட நளாயினியை நாங்கள் நளா என்றுதான் கூப்பிடுவோம்.உயரமான மெல்லிய உடல்வாகு கொண்டவள்.பயிற்சிகள்,கடமைகள் எதுவென்றாலும் அவளுக்கு அத்துப்படி என்றுதான் கூறவேண்டும்.
காலையில் ஐந்து மணிக்குத் தொடங்கும் எங்கட ஓட்டமோ இரவு காவல் கடமையோடு நிறைவுபெறும்.ஒன்றன் பின் ஒன்றாக பயிற்சி,படிப்பு,பாசறை வேலைகளென ஓடிக்கொண்டே இருப்போம்.
பயிற்சி இன்றிய ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் ஓய்வு நாள்கூட துப்பாக்கி சுத்தம் அந்த சுத்தம் இந்தச் சுந்தமென்று பன்னிரண்டு மணிவரை கழிந்துவிடும்.அதன் பின்னரே நாம் எமது சொந்த வேலைகளை பூர்த்திசெய்வோம்.
தொடர்ச்சியான கடும் பயிற்சி ஒன்றில் நாம் ஈடுபட்டிருந்தபோது ஒரு பத்து நிமிட ஓய்வு எப்போது கிடைக்கும் என்று காத்திருப்போம்.அவ்வாறு கிடைத்தவுடனும் கினியா மரங்களை முறித்து போட்டிட்டு அந்த இலைகளின்மேலே படுத்து தூங்கிவிடுவோம்.
ஒரு தடவை உண்ணி அதிகமாக இருக்கும் மரக்கொப்புக்களை முறித்து போட்டிட்டு அவசர நித்திரைகொள்ள உடலெங்கும் உண்ணிகள் ஏறிவிட்டது.பலரது காதுக்குள்ளும் உண்ணி உட்சென்றதால் அதனை எடுப்பதற்கு பொன்னம்பலம் மருத்துவமனைவரை போய்வந்தோம்.
இந்த பயிற்சியின்போது அதிகம் வெயில் வெட்கை எம்மை வாட்டியெடுத்தது.எங்கள் பயிற்சி ஆசான் எங்களில் மிகவும் அக்கறையானவர்.பயிற்சி நேரத்தை தவிர நாம் வெயிலில் நிற்பதை அனுமதிக்கமாட்டார்.
மதியப் பயிற்சி முடிந்ததும் பயிற்சி வெட்டையில் இருந்து ஓடிவந்து அனைவரும் காடுகளுக்குள் புகுந்துகொள்வோம்.மதிய சாப்பாட்டில் யாரும் அக்கறை கொண்டது கிடையாது.நித்திரை கொள்ளத்தான் மனம் விரும்பும்.அதனால் மரக்கொப்புகளை முறித்து போட்டுவிட்டு தூங்கிவிடுவோம்.
அணிகளுக்கு பொறுப்பாக இருப்பவர்கள் சாப்பிடும்படி கூறியபடி திரிவார்கள்.எமக்கு முட்டைக்குழம்பே அதிகமான நாட்களில் வருவதுண்டு.வெயில் வெக்கை பயிற்சி களைப்பு என்பவற்றால் உணவினை தவிர்த்து ஓய்வெடுப்பதிலேயேதான் கவனம் செலுத்திக்கொண்டிருந்தோம்.
சிலர் உணவினை எடுப்பதற்குக்கூட போகமாட்டார்கள்.சிலரோ சாப்பாடு எடுக்க வேண்டும் என்பதற்காக கடமைக்கு எடுப்பார்கள்.
ஆண் போராளிகள் சாப்பிட்டாலும் பெண் போராளிகள் சாப்பாட்டில் அக்கறை காட்டுவதில்லை.
இதனால் பலரும் உடல் மெலிந்துபோனதால் கட்டாயம் சாப்பிட்டே ஆகவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.நாம் சாப்பிடுகிறோமா இல்லையா என கண்காணிக்கவே ஒருவர் நியமிக்கப்பட்டார்.
வழமையான இடத்தில் இருக்காது எங்கட நளாயினி இரு நாட்களாக தனித்துப்போய் சாப்பிடுவதை பார்த்தோம்.மூன்றாம் நாள் நளா ஏன் தனித்திருக்கிறாளென அறிய முற்பட்டதில்தான் ஆள் மாட்டிக்கொண்டாள்.
இரவு சாப்பாட்டினை நாம் கிச்சினில் சென்றுதான் எடுத்துக்கொள்வோம்.அவ்வாறு சென்றுவரும் பொழுதில் நளா சமைப்பதற்கு நிற்கும் பணியாளர்களிடம் தேசிக்காய் வாங்கி வந்து மகசின் வைக்கும் பகுதியோடு இருக்கும் கோல்சரின் சிறு பொக்கற்றுக்குள் வைத்துக்கொண்டுவந்து அதனை தடிகளால் ஓட்டை போட்டு முட்டைக்குழம்புக்குள் தேசிக்காய் புளியை விட்டு சாப்பிடுவதை அவதானித்துவிட்டோம்.
முதல் நாள் இதனை அவதானித்துவிட்டு மறுநாளே நளாவிடம் சென்று விசாரணைகளை தொடங்கினோம்.
முதலில் மறுத்துவிட்டாள்.ஏனெனில் அவளும் யாருக்கும் தெரியாமலே தேரிக்காய் பயன்படுத்தியிருந்தாள்ஆனாலும் எமது வற்புறுத்தலில் உண்மையை கூறிக்கொண்டாள்.
இதன் பின்னரே எமக்கும் தேசிக்காய்விட்டு சாப்பாடு சாப்பிடும் ஆர்வம் பிறந்தது.
துளசி,மான்விழி,அன்புமலர்,மைதிலி நானென பலரும் சாப்பாட்டில் அக்கறைகாட்டாது இருந்தவர்கள்தான்.
இப்போது நளாயினியின் ஐடியாவினால் ஓரளவு தேசிக்காய் விட்டு சாப்பிடத்தொடங்கினோம். வாயிற்கு கொஞ்சம் இதமாக இருந்ததால் மூன்று வேளை உணவுக்கும் தேசிக்காய் பயன்படுத்தினோம்.இப்போது எங்கட கோல்சரில தேசிக்காய் இல்லாத நாள் இல்லை என்றானது.
இது ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் நாளடைவில் பலருக்கும் அல்சர் உண்டாகி அதுவும் அதிகமாகியதால் ஒரு மாதம் கடும் பயிற்சிகள் நிறுத்தப்பட்டு சாதாரண பயிற்சிகள்கூட செய்யாத அளவுக்கு சென்றது.
ஆனால் இறுதிவரை யாரும் நளாவின் கண்டு பிடிப்பான தேசிக்காய் விடயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தப்பித்துக்கொண்டோம்.
நளாவின் அம்மா ஒரு ஆயுள்வேத மருத்துவர்.நளாயினிக்கு இரண்டு தங்கைகள் இருந்தார்கள்.இதில் ஒரு தங்கை போராளியாக இருந்து இறுதி யுத்த நேரம் இரட்டைப் பனையடியில் சித்திரை மாதம் மண்ணோடு காவியமாகியிருந்தாள்.
எங்கட நளாவுக்கும் "சாகரவர்த்தனா"கப்பலோடு சாகசம் புரிந்த நளாயினி அக்காவைப்போல தானும் சாதிக்க வேண்டும் என்றே ஆர்வம்.அது அவள் கனவும்கூட.
தனது கனவுப் பயணத்திற்காக தினமும் கடிதம் எழுதியபடியே இருப்பாள்.ஆனால் அவளது கடமையும் அதிமுக்கியமாக இருந்ததால்,அவள் விரும்பிய பணிக்குப் போக பொறுப்பாளர்கள் அனுமதிக்கவில்லை.
யுத்தத்தின் இறுதி நாளில் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வர மறுத்தவளை தயாளினி,பாமதி இருவரும் சேர்ந்து சாதாரண உடைக்கு மாற்றி உள்பகுதிக்கு கூட்டிவர முனைந்தபோதும் என்ன நினைத்தாளோ தெரியாது தான் இராணுவகட்டுப்பாட்டு பகுதிக்குள் வரவில்லையெனக்கூறி திரும்பி சென்றுவிட்டாள்.
அழியாத பல நினைவுகளை எமக்குத் தந்து சென்றவள்தான் நளாயினி.
இப்போதெல்லாம் தேசிக்காய் என்றாலே எங்கள் நளாயினிதான் கண் முன்னே வந்துபோவாள்.எங்கள் நளா உயிரோடு இருப்பாளா இல்லையா என்று தெரியாமலே 16 வருடங்கள் கழிந்துவிட்டன.
அவள் பெற்றோரும் இன்றுவரை நளாவின் வரவிற்காகவே காத்திருக்கிறார்கள்.
பிரபா அன்பு
தாயகம்19.04.2025
கருத்துகள் இல்லை