எப்படி ஆனையிறவு வெற்றி கொள்ளப்பட்டது.? 📸
1750-1800 ஆம் ஆண்டளவில் ஒல்லாந்தரால் Bascula என்று பெயரிடப்பட்டுக் கட்டப்பட்ட ஒரு காவற்கோட்டைதான் ஒல்லாந்தருக்கு பின் ஆங்கிலேயரிடமும், அதன் பின் சிங்கள இராணுவத்திடமும் வந்துசேர்ந்த ஆனையிறவுப் படைத்தளம்.
யாழ்குடாவையும் வன்னி பெருநிலப்பரப்பையும் பிரிக்கும் கழுத்து போன்ற பகுதி தான் ஆனையிறவு. பெரும் உப்பு வெளிகளால் சூழப்பட்ட, எதிரிக்கு சாதகமாக மிகவும் பாதுகாப்பான முகாம் ஆனையிறவு முகாம்.
1999 இல் இலங்கைக்கு வந்த அமெரிக்காவின் "கிறீன் பரட் " படை அதிகாரிகள், ஆனையிறவு முகாம் பற்றிய மதிப்பீட்டில், எந்த இராணுவத்தாலும் கைப்பற்ற முடியாத இராணுவத்தளம் என்ற சான்றிதழை வழங்கிச்சென்றனர். அவர்கள் சொன்னதில் தவறில்லை.
இராணுவக்கோட்பாட்டின் படி ஆனையிறவு வெற்றிகொள்ளப்பட முடியாத தளம் தான். இதில் புலிகள் விதிவிலக்கானவர்கள். அவர்களின் போர் யுக்தியும் இராணுவக்கோட்பாட்டுக்குள் அடக்கமுடியாதவை என்பதை புலிகள் ஆனையிறவை கைப்பற்றிய பின் உலகமே உணர்ந்தது.
எப்படி ஆனையிறவு வெற்றி கொள்ளப்பட்டது.?
1991 ம் ஆண்டு "ஆகாய கடல் வெளிச்சமர்" என பெயரிடப்பட்ட ஆனையிறவை மீட்கும் முயற்சி, வெற்றிலைக்கேணியில் வைத்து எதிரி தரையிறங்கியதால், பெரும் பிரதேசம் எதிரிவசம் போனது மட்டுமில்லாது, ஆனையிறவை அசைக்க முடியாதென்ற நிலையையும் கொண்டு வந்திருந்தது. அந்த முற்றுகை தோல்வி கண்டிருந்தாலும், அந்தப்போர் "பெரும் மரபுவழி போரியல் பட்டறிவை" புலிகளுக்கு கொடுத்திருந்தது.
ஆனையிறவை பிடிப்பதாக இருந்தால், இராணுவத்துக்கான வழங்கல் பாதையான வெற்றிலைக்கேணியும், பிரதான வழங்கல் பாதையான கண்டி வீதியும் புலிகள் வசம் வந்தால் மட்டுமே வெற்றிகொள்ளமுடியும். இந்த இரு பிரதேசத்தையும் கைப்பற்றுவதென்பது தற்கொலைக்கு ஒப்பான செயல்.
அப்படி யாரும் முயற்சி செய்ய மாட்டார்கள். ஆனால் அந்த வழியைத்தான் தலைவர் தெரிவுசெய்து திட்டமும் தீட்டினார். எதிரி கனவிலும் நினைத்து பாக்காத தற்கொலைக்கு ஒப்பான திட்டமது. லீமா மீதான நம்பிக்கையில் தான் அண்ணை அந்த திட்டத்தை நிறைவேற்ற கட்டளையிட்டார்.
திட்டத்தின் முதல் கட்டமாக கிளிநொச்சியும், வெற்றிலைக்கேணிப் பகுதிகளும் ஒயாத அலைகள் -3 நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்டதன் மூலம் கடல் வழங்கல் பாதை துண்டிக்கப்பட்டது. இப்போது A-9 கண்டி வீதியால் வரும் வழங்கலைமட்டும் தான், ஆனையிறவு இராணுவத்தினர் நம்பியிருந்தனர். அவர்களுக்கான குடிநீர் பரந்தன் பகுதியில் இருந்தும், இயக்கச்சியில் இருந்து தான் செல்லவேண்டும்.
திட்டத்தின் அடுத்த பிரதான கட்டமாக 1200 போராளிகள் கடல் மார்க்கமாக, பிரிகேடியர் பால்ராஜ் அண்ணை தலைமையில் கூடாரப்பில் தரையிறக்கப்பட்டனர். இவர்களை தரையிறங்க விடாமல், சிங்களக்கடற்படையின் 15க்கு மேற்பட்ட டோறாப்படகுகள் தாக்குதலில் ஈடுபட்டது.,அதே நேரம் கரையில் இருந்தும் போராளிகள்மீது 23mm கனொன் மூலம் தாக்குதலை எதிரி மேற்கொண்டான்.
கரையில் இருந்த எதிரி மீது கடற்புலிகள் பெரும் தாக்குதலை மேற்கொண்டு பாதை அமைத்துக்கொடுத்தனர் தரையிறங்குவதற்கு. அதே நேரம் கடற்புலிகளின் தாக்குதலணி, எதிரியின் டோரா படகுகள் போராளிகளை நெருங்கவிடாமல் மறிப்பு சண்டையிட்டபடி துரத்தியடிக்க, 1200போராளிகளும் பத்திரமாக தரையிறங்கினர்.
வெற்றிலைக்கேணி முதல் குடாரப்பு வரையிலான 12 கிலோமீற்றர் தூரம் வரையிலான எதிரியின் படை முகாம்கள் அழிக்கப்பட்டு, எமது படையணிகளுக்கான வழங்கல் தொடர்புகளை ஏற்படுத்தியபின் 1200 போராளிகளும் பெட்டியடித்து நிலைகொண்டனர்.
இப்போது எதிரிக்கு பிரதான உணவு வழங்கள் பாதையும் தடைப்பட்டுவிட்டது. இப்போது கிளாலி கரையின் ஊடாக தான் ஆனையிறவுக்கும், பலாலிக்கும் தொடர்பிருந்தது. பால்ராஜ் அண்ணையை அங்கிருந்து கிளப்புவதற்கு, 20க்கு மேற்பட்ட (பெரிய, சிறிய )ஒப்ரேசன்கள் இரண்டு பக்கமும் இருந்து மேற்கொள்ளப்பட்டது.
பலாலிப்பக்கம் 20 ஆயிரம் ஆனையிறவில் 18ஆயிரம் இராணுவத்திற்கு நடுவில் வெறும் 1200 போராளிகள் மாத்திரம் இருந்தனர். அண்டைக்கு பாக்குவெட்டிக்கு நடுவில் எம்பிட்ட பாக்கு போல தான் லீமா இருந்தவர். கடைசிவரை சிங்களத்தால் அவர்களை அழிக்கமுடியவில்லை.
இவர்களுக்கு உதவியாக பளைப்பகுதிக்குள் ஊடுருவிய கரும்புலி அணி அங்கிருந்த எதிரியின் ஆட்லறி தளத்தினுள் நுழைந்து 11 ஆட்லறிகளை உடைத்து சண்டையின் போக்கை திசை திருப்ப, இயக்கச்சி முகாம் லீமா அணியினரால் கைப்பற்றப்பட்டு பிரதான நீர் வழங்கலும் தடைப்பட்டது.
இப்போது பரந்தன் மட்டும் தான் எதிரிக்கு குடிநீரை வழங்கிக்கொண்டிருந்தது. பலதடவை முயற்சி செய்தும் பரந்தன் பகுதியை கைப்பற்ற முடியாமல் இருந்தது. பரந்தன் பகுதியை எதிரி பலமாக வைத்திருந்தான். பரந்தன் விழுந்தால் தான் ஆனையிறவு விழுந்து விடும் என்பதால் எதிரியும் தனது முழு சக்தியையும் பயன்படுத்தினான்.
எவ்வளவு தூரம் பரந்தனை கைப்பற்றும் முயற்சி தாமதிக்கின்றதோ அந்தளவு தூரம் தரையிறங்கிய 1200 போராளிகளின் உயிர் அச்சுறுத்தலில் இருந்தது. மீண்டும் அணிகள் சீரமைக்கப்பட்டு தலைவரின் ஆலோசனைக்கு இணங்க, கிட்டு பீரங்கி படையணியும், குட்டிசிறி மோட்டர் படையணியும் ஒருங்கமைக்கப்பட்டு முன் நகர்த்தப்பட்டது.
தட்டுவான் கொட்டி பகுதியை கைப்பற்றும் பொறுப்பு ஜெயந்தன் படையணிக்கு வழங்கப்பட்டது. அந்த பகுதியை கைப்பற்றிய நேரம், கேணல். ராஜு அண்ணை தலைமையில் ஆட்லறிகள் எதிரிக்கு மிக அருகாக நகர்த்தப்பட்டு, தரைச்சூட்டு மூலம் எதிரியின் பரந்தன் காவலரண்கள் தகர்தெறியப்பட்டது. இந்த தாக்குதலை பிரிகேடியர் மணிவண்ணன் நெறிப்படுத்தினார்.
இந்த தாக்குதலினால் தப்பியோடும் இராணுவத்தினரை இலக்கு வைத்து, கிட்டு பீரங்கி படையணி மோட்டார் எறிகணையை செறிவாக ஏவிக்கொண்டிருந்தது. கிட்டு பீரங்கி படையணி தூர இலக்குகளை குறிவைத்து தாக்கியது. அதே நேரம் ஆனையிறவு கடல்நீர் ஏரியிலிருந்து, எதிரியின் கடற்காவலரண்களை நோக்கி கடல்புலிகள் 23 MM கணொனால் தாக்கி பெரும் சேதத்தை உண்டாக்கினர்.
அதுவரை பரந்தன் பகுதி மீதான தாக்குதல் இரவு நேரத்திலேயே நடந்தது. இந்த தாக்குதல் பகல் நேரமே மேற்கொள்ளப்பட்டு பரந்தன் பகுதியும் கைப்பற்றப்பட்டது. அதன் பின் ஆட்லறி மற்றும் 120mm மோட்டர்கள் மூலம் செறிவான தாக்குதல் ஆனையிறவு மீது மேற்கொள்ளப்பட்டது. அந்த தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் எதிரி ஆயுதங்களையும் கைவிட்டு பலாலிக்கு தப்பியோடியிருந்தான்.
இந்தத்தாக்குதலை பிரிகேடியர் பானு அண்ணை ஒருங்கிணைத்திருந்தார். மூவாயிரம் இராணுவத்தினர் கொல்லப்பட்ட, ஆனையிறவு படைத்தள மீட்பின் பின் அந்தத்தளத்தில் 22/04/2000 அன்று பானு அண்ணையே புலிக்கொடியையும் ஏற்றியிருந்தார்.
1991ம் ஆண்டு புலிகள் கைகளில் விழும் நிலையில் இருந்த ஆனையிறவு முகாமை, எப்படி ஒரு தரை இறக்கம் மூலம் எதிரி மீட்டானோ, அதே போல அன்றைய நேரம் எம்மிடம் இல்லாத கடற்படை ஒன்றை உருவாக்கி 9 வருடங்களின் பின், மார்ச் 26, 2000 ஆம் ஆண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம் ஒரு தரையிறக்கத்தை புலிகள் செய்தனர். ஆனையிறவை மீட்டு தமிழர் வீரத்தையும், போர் நுட்பத்தையும் உலகுக்கு உணர்த்தினர்.!
*புலிவேந்தன்*
#ஆனையிறவு_பெருந்தள_அழிப்புநாள்
#ஆனையிறவு_மீட்புச்சமர்
#ஆனையிறவு_வெற்றிநாள்
#ஆனையிறவு
கருத்துகள் இல்லை