இன்றுவரை எமக்காக வாய் திறந்து பேசவே இல்லை சர்வதேசம்!
முள்ளிவாய்க்காலோடு
கருகிப்போக வேண்டிய உடல்
இன்றும்
இருப்பதுதான் ஆச்சரியம்
அந்த நாள்
வழமைபோன்று
எறிகணைச் சத்தங்களோடே
விடிந்தது
கொத்துக் குண்டின் வீரியம்
இரவுப் பொழுதையும்
பகலாக்கியபடி இருந்தது
வேவு விமானம்
வட்டமிடா நேரம் பார்த்து
மதியவேளை
குளிப்பதற்காகச் சென்றவளை
எங்கிருந்தோ வந்த
சன்னத்துண்டு
பதம் பார்த்துக்கொண்டதால்
மண்ணோடு சாய்ந்து போனாள்
முகிலரசி
இந்நாளில்தான்
விழி மூடிக்கொண்டாள்
ஓய்வறியாத வீரியவள்
நிரந்தரமாக ஓய்வெடுத்துக்கொண்டாள்
விடியலைத்தேடி
அன்று
ஓடிய கால்கள் எல்லாமே
முள்ளின் மீதுதான்
ஓய்வெடுத்துக்கொண்டன
எங்களை அவர்கள்
மனிதர்களாக மதிக்கவில்லை
சிறுவர்களையும் பயங்கரவாதிகளென்றனர்
சன்னங்கள் துளைக்காத
உடல்களை
காண்பதே அரிதென்றானது
உரிமைக்காக
உயிரைக்கொடுத்தவர் வித்துடல்களைக்கூட
புதைக்க வழியின்றி அந்தரித்தோம்
வாய் இருந்திருந்தால்
பதுங்கு குழிகளும் தறப்பாள்களும்
ஓலமிட்டுக் கதறியிருக்கும்
எங்கள் அழுகுரல்கள்
அவர்கள் காதில் விழவே இல்லை
எண்ணற்ற மரணங்களோ
அவர்கள் மனங்களை
இளகிடச் செய்யவில்லை
நாங்கள்
முகவரி அற்றவர்களாக இருந்தோம்
தோற்றுப் போனவர்களாக
கணிக்கப்பட்டோம்
எம் இனத்தின்
மரண வாயில்
அன்று அகலத்திறந்தே இருந்தது
நெந்நீரும் கண்ணீரும்
ஒன்றாக ஓடிய மண்ணில்
நாங்கள்
ஜடங்களாகவே வாழ்ந்தோம்
அன்று ஊமையாகிப்போன
சர்வதேசம்தான்
இன்றுவரை
எமக்காக
வாய் திறந்து பேசவே இல்லை....
#பிரபா அன்பு
@highlight
கருத்துகள் இல்லை