இலங்கையின் முதல் ஹஜ் குழு இன்று பயணம்!

 


இலங்கையின் முதல் ஹஜ் குழு இன்று பயணம் சவூதி அரேபியாவின் தூதுவர் காலித் பின் ஹமூத் வழியனுப்பி வைத்தார்.


இலங்கையிலிருந்து இம்முறை ஹஜ் கடமையை நிறை வேற்றச் செல்லும்  முதல் ஹஜ் குழுவினை வழியனுப்பி வைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம் பெற்றது.


சஊதி அரேபியாவின் இலங்கைக்கான  தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கத்தானி  ஹஜ் யாத்திரிகர்களை பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை வழியனுப்பி வைத்தார் .


இந் நிகழ்வில் பிரதியமைச்சர்  முனீர் முலஃபர் மேல்  மாகாண ஆளுநர் ஹனிப் யூசுப் இலங்கை ஹஜ் குழுவின் தலைவர், 

ரியாஸ் மிஹ்லார், 


மற்றும்  முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களப்பணிப்பாளர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும்  கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் கலந்து கொண்ட சவூதி அரேபியாவின் தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி கருத்துத் தெரிவிக்கையில்


அனைத்து உலக முஸ்லிம்களாலும் போற்றி விரும்பப்படுகின்ற இஸ்லாத்தின் ஐந்தாவது முக்கிய கடமையான புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவை நோக்கி பயணிக்கின்ற முதல் குழுவை வழியனுப்பும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்முக்கிய நிகழ்வில், உங்களுடன் இணைந்து கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.


இரு புனித மஸ்ஜித்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மான் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் சவூதி அரேபிய அரசாங்கம், ஹஜ்ஜுக்காக வரும் அல்லாஹ்வின் விருந்தினர்களுக்குப் பணியாற்றுவதில் முழுமொத்த பங்களிப்பையும் தவறவிடாமல் செயல்பட்டு வருகிறது. 


ஹஜ் யாத்திரிகர்கள் சவூதிக்குள் வந்ததிலிருந்து தத்தமது நாட்டுக்கு திரும்பும் வரை அனுபவிக்கும் நலன், பாதுகாப்பு மற்றும் வசதிகளை உருதிப்படுத்துவதற்கு நாட்டின் அனைத்து வளங்களையும் சவூதி அரசாங்கம் பயன்படுத்துகிறது.


இந்த ஆண்டு ஹஜ் காலத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சவூதி அரேபிய இராச்சியத்துடன் தொடர்புடைய நிறுவனங்களால் முழுமையாக பூரணப்படுத்தப்பட்டுள்ளன. யாத்திரிகர்கள் பாதுகாப்பாகவும் அமைதியான முறையிலும் ஆண்மீக ரீதியாக நிறைவுபெறும் வகையிலும் ஹஜ் கடமையை நிறைவேற்றக்கூடிய சூழலை உருவாக்குவதற்காக, சுகாதாரம், ஒழுங்கமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு சேவைகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது


புனித ஹஜ் பயண ஏற்பாடுகள் மற்றும் ஒழுங்கமைப்புகள் சிறப்பாக நடைபெறுவதற்காக, சவூதி அரேபிய இராச்சியம் மற்றும் இலங்கையின் அதிகாரிகள் வழங்கிய பயனுள்ள ஒத்துழைப்புக்கு இதயம் கனிந்த பாராட்டுகளையும் தெரிவிக்கின்றோம். இந்த ஒத்துழைப்பு, எமது இரு நாடுகளுக்கு இடையிலான உறுதியான மற்றும் நட்பான உறவுகளை பிரதிபலிப்பதாக அமைகிறது.


எனவே  ஹஜ்ஜுக்காக செல்கின்ற அனைத்து யாத்ரிகர்களுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் அனைவரது ஹஜ்ஜையும் அல்லாஹ் ஏற்றுக்கொண்டு, எல்லோரது பாவங்களையும் மன்னித்து, பத்திரமாக திரும்பிவர அல்லாஹ் அருள்புரியட்டும் என்றும் நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.