அவசர கடிதம்!!
கண் சத்திரசிகிச்சை நிபுணரான வைத்தியர் எம்.மலரவன் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள அவசர கடிதம்....
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட கண் சத்திரசிகிச்சை விசேட வைத்திய நிபுணரும், தேசிய ரீதியில் பாராட்டுதல்களினை பெற்றவருமான விசேட வைத்திய நிபுணர் M. மலரவன் ஜனாதிபதிக்கு அவசர கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளார்.
அவரது கடிதத்தின் பிரதிகள் பிரதமர், சுகாதார அமைச்சர், பிரதி சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வட மாகாண ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் பின்வருமாறு அமைகின்றது.
இலங்கையின் சுகாதாரக் கட்டமைப்பில் உடனடியாக கண் சுகாதாரம் தொடர்பான மூலோபாயத் திட்டமொன்றினை உருவாக்கி அதனை செயற்படுத்தவேண்டியதன் அவசியத்தினை அவர் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு இணையாக இலங்கையின் பல்வேறு சுகாதாரக் குறிகாட்டிகள் காணப்படுகிற போதும் கண் சுகாதாரக் குறிகாட்டிகள் பிராந்திய அண்டைநாடுகளினைவிடப் பின்னடைந்து காணப்படுவது தொடர்பில் அவர் இந்த கடிதத்தில் வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
இலங்கையின் கண் சிகிச்சை சேவைகள் முதனிலை சுகாதாரசேவைளுடன் ஒருங்கிணைக்கப்படாமலும் அவற்றின் ஒரு பாகமாக உள்வாங்கப்படாமலும் உள்ள நிலைமையால் கண் பார்வை இழப்பு அல்லது பாதிப்பு அதிகரித்து ச் செல்வதாக, குறிப்பாக வயது வந்தவர்களில் அதிகரித்து செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதனால் வாழ்க்கைத்தரம், உற்பத்தித்திறன் என்பன பாதிக்கப்படுவதுடன் பார்வை இழந்தவர்களை அதிகளவில் பராமரிக்க வேண்டிய தேவை சமூகத்துக்கும், குடும்பங்களுக்கும் நாட்டுக்கும் ஏற்படுவது பெரும் சுமையாகும் என்று அவர் .சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இந்த நிலைமைகளிலிருந்து நாட்டினையும் மக்களினையும் மீட்டெடுக்க சுகாதாரக் கட்டமைப்பில் உடனடியாக கண் சுகாதாரம் தொடர்பான மூலோபாயத் திட்டமொன்றினை உருவாக்கி அதனை செயற்படுத்தவேண்டியதன் அவசியத்தினை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயத்தில் அரசாங்கம் முழுக்கவனம் சேலுத்த வேண்டும் என்பது பொது மக்களினதும் எண்ணமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை