ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களை விரிவாக்க திட்டம்!


ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தனது விமான இருப்புடன் மேலும் இரண்டு விமானங்களைச் சேர்க்கவுள்ளதாக, அதன் தலைவர் சரத் கிளமென்ட் கணேகோட தெரிவித்தார். இந்த நடவடிக்கை, குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால இலக்குகளை கோடிட்டுக் காட்டும் ஒரு லட்சிய ஐந்தாண்டு மூலோபாயத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்தத் திட்டம் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


புதிய மூலோபாயத்தின் முக்கிய நோக்கம் குறித்து கணேகோட விளக்கினார்: "குறுகிய காலத்தில், நீண்டகால நிலைத்தன்மைக்கு அவசியமான பணப்புழக்கம் மற்றும் இலாபத்தை அதிகரிப்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்." மேலும், "நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை இலக்காகக் கொண்டுள்ளோம் - விமானக் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதுடன், எங்கள் வழித்தட வலையமைப்பையும் விரிவுபடுத்துவோம்" என்று அவர் கூறினார்.


விரிவாக்கத்திற்காகப் பல புதிய வழித்தடங்களை விமான நிறுவனம் ஏற்கனவே அடையாளம் கண்டு முன்னுரிமை அளித்துள்ளதாகத் தலைவர் எடுத்துரைத்தார். கணேகோட மேலும், 6,000 ஊழியர்கள் மற்றும் கேட்டரிங் சேவைகளில் உள்ள கூடுதல் 900 பணியாளர்களும் பெருமைப்படக்கூடிய ஒரு நிறுவனத்தை உருவாக்குவதற்கு விமான நிறுவனம் உறுதிபூண்டுள்ளது என்பதையும் வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.