வடக்கு மாகாணத்தில் தெருநாய்கள் கட்டுப்பாடு!📸


தெரு நாய்களின் எண்ணிக்கையும், அவற்றால் ஏற்படும் சமூக மற்றும் சுகாதாரப் பாதிப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் தொடர்பான முக்கியக் கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை (26.06.2025) வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.


வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தெருநாய்களால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. கடந்த காலங்களில் பல்வேறு திணைக்களங்களின் முயற்சிகளும் போதியளவிலான விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்பதை ஆளுநர் வெளிப்படுத்தி, இது தொடர்பான ஒருங்கிணைந்த, நடைமுறைக்கூடிய வேலைத்திட்டம் மிக அவசியம் என வலியுறுத்தினார்.


இதனடிப்படையில், வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம், சுகாதாரத் திணைக்களம் ஆகியவை இணைந்து செயல்படும் வகையில், முதற்கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் திட்டத்தை அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.


இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி மற்றும் சுகாதார அமைச்சுகளின் செயலாளர்கள், சிரேஷ்ட உதவிச் செயலாளர்கள், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், கால்நடை உற்பத்தி சுகாதார பணிப்பாளர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோர் பங்கேற்று தங்களது மேலாண்மை நிலைப்பாடுகளையும், தீர்வுப் பரிந்துரைகளையும் பகிர்ந்தனர்.


இந்த முயற்சி, தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி, மக்களின் பாதுகாப்பையும், பொதுசுகாதாரத்தையும் உறுதி செய்யும் நோக்குடன் ஆரம்பிக்கப்படுகிறது.








கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.