100 ட்ரோன்களை இஸ்ரேல் மீது ஏவியது ஈரான்!📸


கடந்த சில மணி நேரத்தில் தங்கள் நாட்டின் மீது ஈரான் 100 இற்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.


இந்த தாக்குதல், முன்னதாக அதிகாலையில் ஈரான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல்களுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இஸ்ரேல் இராணுவத்தின் தலைமை செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின் ஈரானின் பதில் தாக்குதல் குறித்து கூறுகையில்,


 “கடந்த சில மணி நேரத்தில், ஈரான் இஸ்ரேலை நோக்கி 100 இற்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவியுள்ளது, மேலும் அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் அச்சுறுத்தல்களை தடுக்க செயல்படுகின்றன.” என்றார்.


சுமார் 200 இஸ்ரேலிய போர் விமானங்கள் இந்த நடவடிக்கையில் பங்கேற்றதாகவும், சுமார் 100 இலக்குகளைத் தாக்கியதாகவும், தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் டெஃப்ரின் மேலும் கூறியுள்ளார்.


*****************. ***********. *************


ஈரானின் இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்; பதற்றம்

- இராணுவ புரட்சிப்படை பிரதானி உயிரிழப்பு


– இரு நாடுகளின் வான் பரப்புகளும் மூடல்


இன்று (13) அதிகாலை இஸ்ரேல் ஆப்ரேஷன் ‘Rising Lion’ என ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.


இந்த வான்வெளித் தாக்குதலில் ஈரானின் அணு ஆயுதத் தளங்கள், இராணுவத் தளங்கள், பயிற்சி முகாம்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


இத்தாக்குதலால் ஈரானின் உயர் இராணுவ அதிகாரிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.


இஸ்ரேலின் தாக்குதலால் ஈரானின் முக்கிய இராணுவ புரட்சிப்படை பிரதானி ஹொசைன் சலாமி உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.


மேலும் ஈரானின் முக்கியமான அணு ஆயுத ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பல அறிவியல் ஆராய்ச்சியாளர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.


இதேவேளை, குறித்த தாக்குதலையடுத்து, அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் பாடசாலைகள் மற்றும் பணியிடங்கள் மூடப்பட வேண்டும் என்றும் கூட்டங்கள் நடத்தப்படக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அதேவேளை இரு நாடுகளின் வான் பரப்புகளும் மூடப்பட்டுள்ளது.


இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கா இந்தத் தாக்குதலுக்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என விளக்கமளித்திருக்கிறது. ஈரான் அணு மற்றும் யூரேனிய ஆயுதங்களைப் பலப்படுத்தி வருவதால், அது இஸ்ரேலுக்கு ஆபத்தாகிவிடும் என்ற நோக்கில் ஈரானின் அணு ஆயுதத் தளங்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.


இதனால் ஈரான் பதிலடியாக இஸ்ரேல் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற போர் பதற்றம் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது.


இஸ்ரேலும், ஈரானின் தாக்குதலை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையேயான இந்த தாக்குதல்கள் போர் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.