ஊடகவியலாளர் நிமலராஜன் எதற்காக, யாரால் கொலை செய்யப்பட்டார் ?
ஊடகவியலாளர் நிமலராஜன் யாரிடமிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார், என்ன காரணத்துக்காக அவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது போன்ற விடயங்கள், அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்னரே வெளிப்படுத்தப்பட்டிருந்ததாக ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் பன்னீர் செல்வம் சிறீகாந் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை தொடர்பாக பார்ப்போமேயானால், அவர் 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி கொலை செய்யப்பட்டிருந்தார். 2000 ஒக்டோபர் 10ஆம் வெளியாகிய பத்திரிகையொன்றில் நிமலராஜனுக்கு எந்தத் தரப்பினால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது என்பதும் அதற்கான காரணம் என்ன என்பதும் தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றது. அன்றைய காலச்சூழலில் நிமலராஜனுடன் நெருக்கமாக பணியாற்றிய மூத்த பத்திரிகையாளரினால் விண்ணன் என்ற புனை பெயரில் எழுதப்பட்ட அந்த விளக்கமான கட்டுரையில் ஈ.பி.டி.பி. கட்சிக்கும் நிமலராஜனுக்கும் முரண்பாடு இருப்பதாகவோ, நிமலராஜனுக்கு ஈ.பி.டிபி. இனால் அச்சுறுத்தல் இருக்கின்றது என்றோ ஒரு வசனம்கூட சொல்லப்படவில்லை. இதுதான் உண்மை. இவ்வாறுதான் அனைத்து குற்றச்சாட்டுக்களும் இட்டுக்கட்டப்பட்டவையாகவே இருக்கின்றன. ஆனால் ஒரு விடயம். கடந்த காலங்களில் நிமலராஜன் மட்டும் கொலை செய்யப்படவில்லை. இந்த மண்ணிலே பல துறைசார் ஆளுமைகள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவையும் விசாரிக்கப்பட வேண்டும். அவ்வாறான கொலைகளுக்கு உடந்தையாக செயற்பட்ட பல ஆசாமிகள் இப்போதும் எம்மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான சில ஆசாமிகள்தான், எமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தூசுதட்டி எம்மை சிக்க வைக்க ஆர்வமாக செயற்படுவதாகவும் சொல்லப்படுகிறது. அவ்வாறானவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஈ.பி.டி.பி ஐ நோக்கி அவர்கள் சுட்டுவிரலை நீட்டும் போது ஏனைய நான்கு விரல்களும் அவர்களை நோக்கியே இருக்கின்றது என்பதை மறந்து விடக்கூடாது.
கருத்துகள் இல்லை