வர்த்தக நிலையத்தில் தீப்பரவல் - காத்தான்குடியில் சம்பவம்!!

 


மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று இரவு ஏற்பட்ட திடீர் தீ பரவலால் குறித்த வர்த்தக நிலையம் முழுமையாக சேதமடைந்துள்ளது.

தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் காத்தான்குடி நகர சபையின் தீயணைப்புப் படையினர் அவசரமாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அவர்களுடன் இணைந்து பிரதேச இளைஞர்கள் மற்றும் பொதுமக்களும் தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். கடும் முயற்சிகளின் பின்னர் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்தினால் வர்த்தக நிலையத்தில் இருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. மேலும், சம்பவம் காரணமாக காத்தான்குடி பிரதான வீதியின் போக்குவரத்தும் ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ பரவிய வேளையில் கடை மூடப்பட்டிருந்ததாகவும், இதனால் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற போதிலும், தீ விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சம்பவ இடத்திற்கு சென்ற காத்தான்குடி பொலிஸார், தீ விபத்திற்கான காரணம் மற்றும் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.