இலங்கை அரச அதிகாரிகளுக்கான அறிவுறுததல்!!
அரச ஊழியர்கள் பாரம்பரிய மனப்பான்மையை உடனடியாக கைவிட வேண்டும் என்று நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சில அரச அலுவலகங்கள், அதிகாரிகளின் உத்தியோகபூர்வ அதிகாரத்தையும் பதவியையும் வெளிக்காட்டும் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுவது வருந்தத்தக்க நிலை என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பழைய சுவர்களாலும் சிறைச்சாலைகள் போன்று சூழப்பட்ட இருண்ட அலுவலக அமைப்பிலிருந்து அரச துறை உடனடியாக வெளியே வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
தற்போது தாம் பயன்படுத்தும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் அலுவலகம் கூட ஒரு டென்னிஸ் மைதானத்தின் அளவுக்கு பெரியதாக உள்ளது என்றும், இதுபோன்ற விசாலமான அலுவலக அறைகளின் கட்டுமானம் எதிர்காலத்தில் தடை செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
அலுவலக இடம் என்பது பதவியின் அதிகாரத்தை வெளிக்காட்டும் இடமல்ல என்றும், உண்மையான தகுதி வாய்ந்த அதிகாரிகளுக்கு தங்கள் ஆளுமையை வெளிப்படுத்த பெரிய அலுவலக அறைகளோ விலையுயர்ந்த தளபாடங்களோ தேவையில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
எனவே, அரச அலுவலக அமைப்பானது, அவர்கள் ஒரு குழுவாக எளிதாக இணைந்து பணியாற்றக்கூடிய 'பணிநிலைய' (workstation) மாதிரிக்கு மாற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஒரே அமைச்சகத்தை சேர்ந்த நிறுவனங்கள் வெவ்வேறு இடங்களில் சிதறிக்கிடப்பதால் ஆளுகையும் அரச சேவையும் கடினமாகிவிட்டதாகவும், எதிர்காலத்தில் அரச நிறுவனங்கள் ஒரே வளாகத்தில் ஒருங்கிணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் கூறியுள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை