நீரை பாதுகாக்க அரச நிறுவனமொன்றை உருவாக்கவேண்டும்!

"நீர் பாதுகாப்பு என்ற விடயம் பல்வேறு அரச நிறுவனங்களில் கீழ் வருவதால் அதை கையாள்வது சவாலுக்குரிய விடயமாகியுள்ளது. எனவே, நீரை பாதுகாக்கும் பணியை சரிவரச் செய்வதற்கு பொறுப்பான தனியான அரச நிறுவனமொன்றை உருவாக்கவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
“இயற்கையும் நீரும்” என்ற தொனிப்பொருளில் இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற உலக நீர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் "இலங்கையிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட ஆறுகள், ஆற்றுப் படுக்கைகள், நீர் மூலங்களை பாதுகாப்பதற்கு தனியான செயற்திட்டத்தை அமுல்படுத்துவதற்கான ஒரு நிறுவனம் இல்லாமை துர்ப்பாக்கியமான விடயமாகும். நீர் பாதுகாப்பு என்பது பல்வேறு அரச நிறுவனங்களில் கீழ் வருவது என்பது மிகவும் சவாலுக்குரிய விடயம்.
நீர்ப்பாசனத் திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, மகாவலி அதிகாரசபை, வன பரிபாலனத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் போன்ற அரச நிறுவனங்கள் நீர் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பாக உள்ளன. ஆனால், அடுத்த பரம்பரைக்கு கொடுப்பதற்காக நீரை பாதுகாக்கின்ற விடயத்தை யாருமே சரிவர செய்யமுடியாத நிலவரம் காணப்படுகிறது.
எதிர்கால சந்ததியினருக்கு நீரை பாதுகாத்துக்கொடுக்கும் பணியை சரிவரச் செய்வதற்கு பொறுப்புடைய தனியான அரச நிறுவனமொன்றை உருவாக்கவேண்டும். வெவ்வேறு அமைச்சுகளின் கீழ் வருகின்ற நீர் சம்பந்தமான நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு பாதகமில்லாத வகையில், நீரை பாதுகாக்கும் பணியை இந்நிறுவனம் மூலம் செய்யவேண்டும்.
தொழிற்சங்கங்கள் ஊழியர்களின் சம்பள அதிகரிப்பில் காட்டுகின்ற கரிசணையை பாவனையாளரின் தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்வதிலும் நீர் வழங்கலின் தரத்தை பேணுவதிலும் காட்டவேண்டும். தரநிர்ணயத்தை உரிய முறையில் கையாள்வதில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஊழியர்கள் அனைவரின் பங்களிப்பும் அவசியமானது." எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.