முகநூலில் இனவாத கருத்துக்களை பதிவிட்ட இருவர் கைது!

முகநூலில் இனவாத கருத்துக்களை பதிவிட்ட கல்முனையைச் சேர்ந்த இருவர் கல்முனை நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கல்முனை பாரதி வீதி மற்றும் சின்னத்தம்பி வீதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 40 வயதுடையவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் மீது இன வெறித் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டபோது இவர்களுள் ஒருவர் அவற்றை நியாயப்படுத்தும் வகையில் முஸ்லிம்களுக்கு எதிரான இன வெறுப்பு கருத்துக்களை தெரிவிக்க, மற்றவர் அதனை தனது முகநூலில் காணொளியாக பதிவேற்றம் செய்திருந்தார். இந்நிலையில் முஸ்லிம் தரப்பினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த இவர்கள் இருவரும் இன்று புதன்கிழமை சரணடைந்த நிலையில், கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் நௌபல் றிஸ்வான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது, இருவரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.