லேகியம் சாப்பிட்ட இளைஞர் பலி! மருத்துவரையும் வாகனமும் தீ வைத்து மக்கள் எரிப்பு!

அயப்பாக்கத்தில் உடல் எடை குறைய லேகியம் சாப்பிட்டவர் உயிரிழந்த விவகாரத்தில், வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு லேகிய வியாபாரிகளை பொதுமக்கள் அடித்து உதைத்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சென்னை அண்ணனூர் அருகே உள்ள அயப்பாக்கம் – தெருவீதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரதீப்குமார் (27). இவர் 100 கிலோ எடை இருந்ததால், உடல் பருமனைக் குறைக்க உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.
அதற்காக சிகிச்சை எடுக்க தீர்மானித்த நேரத்தில் சாலையோரம் வாகனத்தில் லேகியம் விற்கும் வடமாநில நபர்களைப் பார்த்துள்ளார். அவர்களிடம் பேசியுள்ளார். அனைத்து நோய்களுக்குமான சகலரோக நிவாரணி மருந்து விற்பதாகக் கூறும் சாலையோர வட மாநில லேகிய வியாபாரிகளிடம் உடல் எடை குண்டாக இருப்பதால் அதை குறைக்க என்ன செய்ய வேண்டும், ஏதாவது மருந்து இருக்கிறதா? என்று கேட்டுள்ளார்.
“அரே இந்த லேகியத்தை ஒரு மண்டலம் சாப்பிடுங்கள் எப்படி ஜம்முனு ஆணழகன் மாதிரி ஆகிறீர்கள் என்று பாருங்கள்” என்று வட மாநில லேகிய வியாபாரிகள் ஆசை காட்டியுள்ளனர். அவர்கள் கூறியதை கேட்ட சந்தோஷப்பட்ட பிரதீப் லேகியத்தை வாங்கி சாப்பிட்டுள்ளார்.
லேகியம் சாப்பிட்டதால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அன்று இரவு மீண்டும் கடுமையான வயிற்று வலி ஏற்படவே, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று அதிகாலை, சிகிச்சை பலனின்றி பிரதீப்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து காவல்துறையில் பிரதீப்பின் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து சாலையோரத்தில் லேகியம் விற்பனை செய்தவர்களைப் போலீஸார் தேடிவந்தனர். இந்நிலையில், பிரதீபுக்கு லேகியம் விற்பனை செய்த வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேர், நேற்று மீண்டும் அதே பகுதியில் லேகியம் விற்பனை செய்வதற்காக காரில் வந்தனர்.
அவர்களைப் பார்த்த பொதுமக்கள், இருவரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களை சரமாரியாக அடித்து, உதைத்து திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அத்துடன் ஆத்திரம் தனியாத பொதுமக்கள் லேகியம் விற்பனை செய்வதற்காக, அவர்கள் பயன்படுத்திய காரையும் தீ வைத்து எரித்தனர்.
லேகியம் விற்பனை செய்தது தொடர்பாக வடமாநிலத்தைச் சேர்ந்த மேலும் 3 ஆண்கள் மற்றும் 2 பெண்களைப் பிடித்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.