மே மாதம் முதலாம் திகதி கூட்டமைப்பின் கிழக்கு மாகாண மேதினக்கூட்டம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள கிழக்கு மாகாணத்திற்கான மேதினக் கூட்டமும், தொழிலாளர் பண்பாட்டுப் பேரணியும் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு வெல்லாவெளியில் இடம் பெறவுள்ளது. போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர், யோ.ரஜனி தலைமையில் தொழிலாளர் தின நிகழ்வு இடம் பெறவுள்ளது. முன்னதாக தொழிலாளர் பண்பாட்டுப் பவனி போரதீவுப்பற்று பிரதேசசபை அமைந்துள்ள வெல்லாவெளி சந்தியிலிருந்து ஆரம்பமாகி, மே தினப் பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ள வெல்லாவெளி பொது விளையாட்டு மைதானத்தை சென்றடையவுள்ளது.
இதனைத் தொடர்ந்து இடம் பெறும் மேதினக் கூட்டத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் மேதின அறிக்கை வெளிப்பகர்வினை வெளிப்படுத்தவுள்ளார்.
இந்த மே தினக்கூட்டத்தில், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் ஒன்று கூடி, இலங்கைத் திருநாட்டின் பன்முகத் தன்மையை உரத்துச் சொல்லி வலியுறுத்துதல், தமிழ்த் தேசியத்தின் நியாயங்களுக்கு வலுச்சேர்த்தல், கூட்டாட்சியை கொலுவேற்றும் உரிய அரசியல் அமைப்பின், உருவாக்கத்தை முன் நகர்த்துமாறு அழுத்தம் கொடுத்தல், நில மீட்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, மீள் குடியேற்றம், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான கரிசனை, போர் இடம் பெற்ற காலத்தில் விதவையாக்கப்பட்டோரின் பொருளாதார மேம்பாடு, இளையோரின் மேம்பாடு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி தீர்மானங்களையும் நிறைவேற்றவுள்ளனர்.
கருத்துகள் இல்லை