புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் வீதியைச் சீரமைக்க கோரிக்கை!
புதுக்குடியிருப்புப் பிரதேச சபைக்குட்பட்ட மன்னாகண்டல் வீதியைச் சீரமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்புப் பிரதேச சபையின் மன்னாகண்டல் 3ஆம் கண்டம் இடது கரையில் உள்ள 168ஆம் இலக்க காணி அருகாமையாக செல்லும் வீதியானது 1978ஆம் ஆண்டிலிருந்து திருத்தப்படாது போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கின்றது. இதனால் போக்குவரத்துக்கு மிகவும் சிரமப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:
நாங்கள் மிகவும் தாழ்மையான இடத்தில் குடியிருக்கின்றோம். மழை நேரங்களில் போக்குவரத்துச் செய்யமுடியாத நிலைகாணப்படுகின்றது. பிள்ளைகள் பாடசாலை செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். அதுமட்டுமன்றி இந்த வீதியில் உள்ள பேராற்றுப்பாலமும் இடிந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
வீதி திருத்தம் தொடர்பில் ஒட்டுசுட்டான் நீர்ப்பாசன பொறியியலாளருக்கும் தெரியப்படுத்தினோம். திருத்த வேலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு வருடம் கடந்தும் எந்தவித வேலையும் இடம்பெறவில்லை. இது பற்றி பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளருக்கும் அறிவித்துள்ளோம்.
உரியவர்கள் இதைக் கவனத்தில் எடுத்து வீதியை வெகுவிரைவில் திருத்தி அமைத்து போக்குவரத்துக்கு வழிவகை செய்துதர வேண்டும் -– என்றனர்.
இது தொடர்பில் பிரதேச நீர்ப்பாசனப் பொறியியலாளரிடம் கேட்டபோது, ‘‘இந்த வீதித் திருத்தம் தொடர்பில் பிரதேசத்தில் சிலர் ஒப்பமிட்ட கடிதம் பிரதேச செயலருக்கு அனுப்பப்பட்டது. வீதி எமது திணைக்களத்துக்கு உட்பட்டதால் பிரதேச செயலகத்தால் எமக்கு அனுப்பப்பட்டது. அதற்கிணங்க எம்மால் பார்வையிடப்பட்டு திருத்தத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரு மருங்கு வேலிகளையும் அகற்றித்தருமாறு அப்பகுதி அமைப்புக்கும் கடிதம் அனுப்பிய விண்ணப்பதாரருக்கும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை வேலி அகற்றப்படவில்லை. இதனால் வேலை நடைபெறவில்லை’ ’ எனத் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை