வைரமுத்து காவிரிக்கான போராட்டத்தில் பங்குபற்றினார்!

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் காவிரி மேலாண்மை அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்றிரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிகளை நடத்துவதற்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதனால், ஐபிஎல் போட்டி வீரர்களுக்கும், போட்டி நடக்கும் மைதானத்திற்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அண்ணாசாலையைத் தாண்டி சேப்பாக்கம் மைதானம் நோக்கி செல்லும் சாலை முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. 
இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜா, கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பின் பேசிய வைரமுத்து, ‘இது கிரிக்கெட்டுக்கு எதிரான போராட்டம் இல்லை, காவிரிக்கான போராட்டம். காவல்துறைக்கு எதிரான போராட்டம் அல்ல. தமிழருக்கான போராட்டம்’ என்றார்.
இயக்குனர் பாரதிராஜா பேசும்போது, ‘நாங்கள் அனுமதி வாங்கி கொண்டுதான் இந்த போராட்டத்தை ஆரம்பித்தோம். எந்த கட்சியும் இல்லாமல், தமிழ் உணர்வோடு நாங்கள் போராடுகிறோம். ஐபிஎல் போட்டிக்கு எதிராக கண்ணியமான முறையில் எங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தோம்; போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் சிலர் உள்ளே நுழைந்திருக்கலாம்’ என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.