இறுதி யுத்த காலத்தில் ஊடகவியலாளர் அன்பரசனின் அனுபவ பகிர்வு!


2009 ஆண்டின் இறுதி யுத்த காலத்தில் சிறிலங்கா படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்துவதை வீடியோ பதிவு செய்த ஊடகவியலாளர்களில் அன்பரசன் என்பவரும் முக்கியமானவர். சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப்படத்தில் “எறிகணைத்தாக்குதல் இடம்பெறும் சமயத்தில் நீங்கள் வீடியோ எடுக்கவேண்டாம் படுங்கோ” என்று சொல்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த வீடியோ காட்சியினை அன்பரசனே எடுத்திருந்தார். அன்பரசனின் அனுபவங்களை இங்கே பதிவுசெய்கின்றேன்.



அன்றைய நாட்களில் ஒரு வீடியோவை தரவேற்றுவது என்பது மிகவும் கடினமான காரியமான இருந்தது. உழவு இயந்திரத்தின் மேல் மண் மூடைகள் அடுக்கி அதற்கு கீழே படுத்துக்கொண்டு ஒரு மடிக்கணனியில் தான் எல்லா வீடியோக்களையும் நான் வெளிநாடுகளுக்கு அனுப்பினேன். ஒரு கட்டத்துக்குப் பிறகு எங்களால் வீடியோ எடுக்கமுடியாமல் போய்விட்டது. எடுத்த வீடியோக்களையும் வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாதென்றாகிவிட்டது. இரத்தமும் சதையுமாக அழுகுரல்களோடு சேர்ந்த குண்டுத்சத்தங்களையும் காட்சிப்படுத்திய என் கமராவும் ஓய்ந்து போனது. இனி என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.



இனியாவது குடும்பத்திற்கு சாப்பாடு ஏதும் கிடைக்குமோ என்று தேடி அலைவோம் என முடிவெடுத்தேன்.
எனது நண்பன், “ ஒரு ஸ்ரோருக்குள் அரிசி கிடக்காம், போய் எடுப்பமா? என்றவுடன் நானும் அவனும் அவ்விடத்திற்கு புறப்பட்டு போனம். சரியான ஷெல் அடி. அங்கயும் இங்கயும் ஒரே பிணங்கள். எல்லாவற்றையும் கடந்து, சாப்பாட்டுக்காக அங்கே போய் பார்த்தபோது மூன்று பேர் இறந்து கிடந்தார்கள்.. அவர்களைத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு நெல்லு மூடை ஒன்றை தோளில் போட்டுக்கொண்டு வேகமாக திரும்பி வந்துகொண்டிருந்தேன்.



மிக அருகில் ஆமி நிக்கிறான். இருந்தாலும் பசி எங்களுக்கு ஒரு துணியவைத்தந்திருந்தது. நானும் நண்பனும் நெல்லைத் தூக்கிவருவதைப் பார்த்த சனங்களும் அந்த ஸ்ரோருக்குள் ஓடிப்போனார்கள். திடீர் என எறிகணைகள் தொடர்ச்சியாக வீழ்ந்து வெடித்து அந்த ஸ்ரோர் ஒரே புகைமண்டலமாக மாறியது. அவ்விடத்துக்குப் போனவர்கள் ஒருவரும் தப்பவில்லை. என்னுடன் வந்த நண்பன், “ இன்னும் கொஞ்சம் அதிரஸ்ரம் இருக்கு” சொல்லிக்கொண்டே எமது வீட்டுக்காரர் இருந்த இடத்திற்கு ஓடினோம்.


பசிக்கொடுமை, தண்ணீர் பற்றாக்குறை இவைகளை தேடிப் போயே பலர் எறிகணைத்தாக்குதலில் மாண்டிருக்கிறார்கள்.
மரணகளத்தில் நின்று மனிதத்தைக் காக்கத் துடித்தோம். அன்றைய நாட்களில் மீள்நினைவுகள் வரும் போது மனம் பதறுகிறது. எல்லாம் கைமீறிப்போய்விட்டதே…!


இனி என்ன நடக்கப்போகிறது என்றே விளங்வில்லை. எனது கையில் இருந்த படியே சிறுவன் ஒருவனின் உயிர் பிரிந்தது. என்னால் அந்தப் (யதுசன்) 13 வயதுப் பாலகனை மறக்கமுடியாமல் இருக்கின்றது. இறுதியாக இயங்கிய வைத்தியசாலை ஒன்றில் இறந்து கிடந்தவர்களைப் வீடியோ பதிவாக்கி விட்டு திரும்பும்போது இறந்த உடல் ஒன்றில் என் கால் இடறிவிழப்பார்த்தேன்.


 நிதானித்து நின்று யாரோ தெரிந்தவர் போல என்று உற்றுப்பார்த்த்தேன். அது “கணேஸ் மாமா” “என்ர முகத்தை கடைசியாகப் பார்த்திட்டு போ” என்று சொல்வதை போல கிடந்தார். அப்பொழுது இறந்தவர்களின் உடலங்களை ஓரமாக அடுக்கிகொண்டு இருந்த காவல்துறை உறுப்பினர் ஒருவர் “ இவர்தான் கணேஸ் மாமா தெரியுமா” எனக் கேட்டார்.


அவருக்கு அந்த நேரம் சொல்வதற்கு வார்த்தைகள் ஒன்றும் என்னிடம் இல்லை.
கணேஸ் மாமா வன்னியின் சிறந்த நகைச்சுவை நடிகர். இவரைத் தெரியாதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள்.
எனது உற்ற நண்பன் சிறிராமுடன் (இசைப்பிரியாவின் கணவர்) 15 ஆம் திகதி இரவு கதைத்தேன். “ நாளை இரவுக்கு இறங்கப்போறம். நான் தான் கொமாண்டர் மச்சான். ஒரு கை பாப்பம். இரும்புக் கோட்டைக்குள்ள போகப்போறம். 

வெற்றியெண்டா சந்திப்பம். இல்லாட்டி அலுவல் முடிந்தது மச்சான்”, “நீ இசைப்பிரியாவை கூட்டிக்கொண்டு போ” என்று சொன்னது காதுக்குள் இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கின்றது.” எனச் சிறீராம் சொன்னவைகளை எப்படி மறப்பது?


இசைப்பிரியாவின் இறுதிச்சந்திப்பும் இறுதி வார்த்தைகளும் இப்போதும் நினைத்தால் மனதை வாட்டுகின்றது. மே 14ம் திகதி எமது பங்கருக்குள் விழுந்த செல் வெடித்திருருந்தால் இத்தனை துயரங்களையும் பார்த்திருக்கமாட்டேன். ஆனால் நான்கு குடும்பங்கள் இன்று இல்லாமல் போயிருக்கும்.


16 ஆம் திகதி மாலை 6 மணியளவில் பாணு அண்ணனின் இறுதி வார்தைகள் இன்னமும் கேட்கின்றன. “இன்னும் ஏன்ரா நிக்கிறாய்? கூட்டிக்கொண்டு போக கூடியவர்கள் கூட்டிக்கொண்டு போங்கோ எல்லாம் முடிஞ்சிது”. ஆனால் அந்த மாலைப் பொழுதில் அவரும் இன்னும் மூன்று போராளிகளும் எதிர்த் திசையாக நடந்தார்கள் .


நாங்களும் படையினர் பக்கம் போகப்போறம் என்ற பயத்துடன் அன்றைய இரவினை வெடிச்சத்தங்களுடன் நகர்த்தினோம். நள்ளிரவினை தாண்டி அதாவது 17 அதிகாலை பாரிய குண்டுச்சத்தங்கள் நந்திக்கடல் பக்கமாகக் கேட்டது. கேப்பாபுலவு பக்கமாக முல்லைத்தீவில் இருந்து பல்குழல் எறிகணைகள் தொடச்சியாக விழுந்து வெடிப்பதில் தூரத்தை கணிக்கமுடிந்தது. நான் மனைவிக்கு, “ சிறிராமாக்கள் அங்கால போய்ற்றாங்கள் போல, தூரத்தில சத்தங்கள் கேட்குது.


என்று சொன்னவாறே அன்றைய இரவுப்பொழுதினை கழித்தேன். எனக்கு ஒரே யோசினையாக இருந்தது. “

டேய் நீ இசைப்பிரியாவை கூட்டிக்கொண்டு போ” என்று சிறிராம் சொன்னவன். நான் எவ்வளவு கேட்டும் அவா வரல. “அன்ணை உங்களோட இன்னொரு போராளியும் வாறா, நானும் வந்தா உங்களையும் பிடிப்பான், வந்தா சிறிராமுடன் தான் வருவன் இல்லாட்டி வரமாட்டன்” என்று கூறிய அவளின் வார்த்தைகளின் கனதி அப்போது அந்தச் சூழலில் எனக்கு தெரியவில்லை. இப்போது வலிக்கிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.