கூட்டாட்சியைக் கோருவது ஏன்? – ரணில் முன்பாக எடுத்துரைத்தார் விக்னேஸ்வரன்!
அதிகாரப் பகிர்வு பற்றிக் கூறிக்கொண்டு மாகாணங்களை சுயமாக இயங்க விடாது மத்தி தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கப் பார்ப்பது நியாயமான ஒரு விடயம் அல்ல. அதனாலேயே நாங்கள் கூட்டாட்சியைக் கோருக்கின்றோம். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் வர்த்தக தொழில்துறை மன்றம் மற்றும் தேசிய வர்த்தக அபிவிருத்தி அதிகார சபையின் ஆதரவில் புதிய தொழில்முனைவோருக்கான மதிப்பளிப்பும் விருது வழங்கும் வைபவமும், செல்வா பலஸில் நேற்று இரவு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, போர்க் காலத்தில் கூட இங்கு வர்த்தக நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தது. பணப் புழக்கம் இருந்தது. போரின் பின்னரான கடந்த 9ஆண்டுகளில் வடக்கு வர்த்தக நடவடிக்கை சுழியமாகவே இருக்கின்றது.
வடக்குக்கு வெளியில் உள்ள வர்த்தகர்களின் உள்நுழைவு எங்கள் வர்த்தகர்களைப் பாதிக்கின்றது. புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகள் வடக்கில் போரின் பின்னர் முதலிடுவதற்குரிய சூழல் ஏற்படுத்தப்படவில்லை.
கொழும்பு அரசு அதனை விரும்பவில்லைப் போலும். தெற்கிலிருந்து முதலீடுகள் வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். வடக்கு – கிழக்கு மாகாணங்கள் ஏனைய மாகாணங்களை விஞ்சக் கூடாது என்ற நோக்கில் செயற்படுகின்றார்களோ தெரியவில்லை.
வடக்கு மாகாண அரசுக்கு வர்த்தக வாணிபங்களை கவனிப்பதற்கு அமைச்சு இருந்தாலும், எங்களது அதிகாரங்களை மீறி கொழும்பு அரசு ஆதிக்கம் செலுத்துகின்றது. போரின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட நுண்கடன் நிறுவனங்களின் பசப்பு வார்த்தைகளால் எங்கள் வர்த்தகர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.
ஏனைய பகுதிகளில் இருந்து வருகைதந்து இந்தப் பகுதிகளில் வர்த்தகங்களில் ஈடுபடுபவர்கள் பற்றி எமக்கு ஆட்சேபனை இல்லாதபோதும் அவர்களின் வர்த்தக நடவடிக்கைகள் இங்குள்ள ஒட்டுமொத்த வர்த்தகர்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்குப்பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அமையுமாயின் அவ்வாறான வர்த்தகங்கள் வரவேற்கக்கூடியன.
தற்போதைய நிலையில் இந்தப் பகுதிகளில் உள்ள வர்த்தக மூல வளங்கள் மற்றும் மனித வளங்கள் அனைத்தும் பிற தேவைகளுக்காக அதுவும் வடபகுதிக்கு வெளியேயான பகுதிகளின் முன்னேற்றகரமான நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுவது இப் பகுதியின் வளர்ச்சியை பின்நோக்கித் தள்ளுவதான ஒரு நடவடிக்கையாகவே நாம் பார்க்கின்றோம்.
அண்மையில் கொக்கிளாய், கருவாட்டுக்கேணி போன்ற இடங்களில் இல்மனைட் அகழ்வுகள் நடாத்துவது பற்றி எமக்குக் கூறப்பட்டது. புல்மோடை இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்தின் கீழ் உள்ளடங்கியிருந்தால் அது வேறு விடயம்.
இப்போது வடக்கு மாகாணத்தில் இருந்து வளங்களை வெளியே எடுத்துச் செல்ல எத்தனிக்கின்றீர்கள் என்று நான் கூறவும் எமது பிரதேசத்துக்கு இதற்கான ஒரு ஆலையைப் பெற்றுத்தருவதாகவும் இங்குள்ளவர்களை அதில் வேலை செய்ய இடமளிக்கப் போவதாகவும் கூறப்பட்டது.
நான் இன்னொரு வேண்டுதலை முன் வைத்தேன். ஒரு மாகாணத்தின் வளங்களின் வருமானத்தின் பெரும் பகுதி திரும்பவும் அதே மாகாணத்துக்கு கொண்டுவர வேண்டும் என்றேன். அந்த வருமானங்கள் மத்திக்குக் கிடைக்கும் என்றும் மத்தி எல்லோருக்கும் பொதுவாக அவற்றைப் பாவிக்கும் என்று கூறப்பட்டது.
போரினால் பாதிக்கப்பட்ட எமது பிரதேசம் கூடிய வருமானங்களைப் பெற வேண்டியிருக்கும் இந்த நேரத்தில் வளங்களை மத்திய அரசு தான் எடுக்கப் பார்ப்பதால் தான் நாங்கள் கூட்டாட்சி கேட்கின்றோம் என்றேன். அதிகாரப் பகிர்வு பற்றிக் கூறிக்கொண்டு மாகாணங்களை சுயமாக இயங்க விடாது மத்தி தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கப் பார்ப்பது நியாயமான ஒரு விடயம் அல்ல – என்றார்.
கருத்துகள் இல்லை