பெண்களுக்கு எதிரான வன்முறை கட்டுப்படுத்தப்படுவதில்லை !
இலங்கையின் சட்டத்தில் பெண்கள் பாதுகாப்
புத் தொடர்பாக அதிகளவான நடைமுறைகள் இருந்த போதிலும் தற்போது, இடம்பெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்துவற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை என்பது வருத்தத்துக்குரியது.
புத் தொடர்பாக அதிகளவான நடைமுறைகள் இருந்த போதிலும் தற்போது, இடம்பெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்துவற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை என்பது வருத்தத்துக்குரியது.
இவ்வாறு தலைமை அமைச்சரின் பாரியாரும், பேராசிரியருமான மைத்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
போரின் பின்னரான சூழலில் பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வலுவூட்டல் என்ற தலைப்பிலான பன்னாட்டுப் பெண்கள் மாநாடு யாழ்ப்பாணம் பொதுநூலக கேட்போர் கூடத்தில் நேற்று ஆரம்பமானது.
யாழ்ப்பாண மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களில் இணையத்தின் ஏற்பாட்டில் நேற்று ஆரம்பமான இந்த மாநாடு, இன்றும் நடைபெறவுள்ளது. மாநாட்டின் மாலை நிகழ்வில் தலைமை அதிதியாகக் கலந்து கொண்ட, தலைமை அமைச்சரின் பாரியார் மைத்திரி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்ததாவது,
பெண்களின் பாதுகாப்பு, பெண்ணியக் கோட்பாடுகள் எல்லோருக்கும் பொதுவாக அமையவேண்டும். போரின் பின்னர் வடக்கில் பெண்களின் உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன. பெண்களை வலுவூட்டும் செயற்பாடு அரசியல் உள்ளிட்ட சகல வழிகளிலும் பலவீனமாகவே இருக்கின்றது. பெண்களை வலுவூட்டும் செயற்பாடுகளுக்கு போதியளவு உதவிகள் கிடைக்கப் பெறுவதில்லை.
முதலாவது பெண் தலைமை அமைச்சரை உருவாக்கிய நாடு இலங்கை. இந்தச் சிறப்பு இருந்தாலும், இன்று பெண் தலைவர்களை உருவாக்குவது மிகக் குறைவாக இருக்கின்றது.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 15 பேரே பெண் உறுப்பினர்களாகக் காணப்படுகின்றனர். அதிலும் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு பெண் பிரதிநிதியே காணப்படுகின்றார். பெண் தலைவர்கள் உருவாக வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது.
பால்நிலை சமத்துவம் தொடர்பில், ‘ஜென்டர் செல்’ என்ற திட்டத்தின் மூலம் முக்கியமாக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் காணப்படும் பகிடிவதைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் எந்த நேரத்திலும் பகிடி வதை சம்பந்தமான முறைப்பாடுகளைச் செய்யக் கூடியவாறு உமா குமாரசாமி என்பவரின் நெறியாள்கையில் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது – என்றார்.
இந்த நிகழ்வில், வரவேற்புரையினை மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் திருமதி சறோஜா சிவசந்திரன் வழங்கினார். தலைமை உரையினை, அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைத் தலைவர் தே.தேவானந்த் வழங்கினார்.
‘வளர்ந்த நாடுகள் ஆய்வுகளுக்காகப் பெருந்தொகைப் பணத்தை செலவிடுகின்றன. ஆனால் வளர்முக நாடுகள் அவ்வாறு செய்வதில்லை. வளர்ந்த நாடுகள் எம்மைப் பற்றி ஆய்வு நடத்தி முடிவு சொல்லும் நிலையிலேயே நாங்கள் இருக்கின்றோம்’ என்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழக விரிவுரையாளர் திருமதி தே.ஜனனி தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் இருப்பதாக, யாழ்ப்பாண மாவட்டச் செயலக மேலதிக மாவட்டச் செயலர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரம் தெரிவித்தார்.
போருக்குப் பின்னர் பெண்கள் எல்லா நேரமும் கண்காணிக்கப்படுகின்றார்கள் என்பதைத்தான் சகல போர்களும் உணர்த்துவதாக, இந்தியப் பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி டி.ஆர்.அரங்க மல்லிகா தெரிவித்தார்.
நேற்றைய முதலாம் நாள் நிகழ்வில், 7 ஆய்வுரைகள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை