ஒ.பன்னீர்செல்வம் முறைகேடான சொத்து தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை!

துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் முறைகேடாக அதிக சொத்து சேர்த்தது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.



அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து வாங்கியுள்ளதாக திமுகவின் அமைப்பு செயலாளரும் எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி இன்று (ஜூலை 16) உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இது தொடர்பாக தனது மனுவில், “துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதாபானு மற்றும் சகோதரர்கள் பெயரில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார்.

வருமானம் குறித்து தவறான தகவல்களை தேர்தல் வேட்புமனுக்களில் கொடுத்துள்ளார்.

தேனி மாவட்ட போஜராஜன் மில்ஸ் நிறுவனத்துக்கு 99 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட 140 கோடி ரூபாய் நிலத்தை சந்தை விலைக்கு குறைவாக கொடுத்து வாங்கியுள்ளார்.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் செண்பகத்தோப்பு பகுதியில் மாந்தோப்பு வாங்கியுள்ளார்.

அமெரிக்கா, துருக்கி, இந்தோனேசியா நாடுகளில் உள்ள நிறுவனங்களிலும், இந்திய நிறுவனங்களிலும் பன்னீர்செல்வத்தின் வாரிசுகள் முதலீடு செய்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

2011 தேர்தலில் மனைவிக்கு 24.20 லட்ச ரூபாய் சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட பன்னீர்செல்வம், 2016ல் 78 லட்ச ரூபாய்க்கு சொத்துள்ளதாக தெரிவித்துள்ளது சந்தேகத்தை எழுப்புவதாக உள்ளது என்றும் மனுவில் தெரிவித்துள்ள ஆர்.எஸ். பாரதி, “பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் மூன்று நிறுவனங்களில் இயக்குநராக உள்ளார்.

பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சொத்துக்களை வாங்கியுள்ளார். சேகர் ரெட்டி டைரியில் பன்னீர்செல்வத்துக்கு தொடர்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 6 மாதங்களில் அவரிடம் 4 கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளதாக டைரியில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் தனக்கு வாக்களித்த மக்களுக்கு பன்னீர்செல்வம் துரோகம் இழைத்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மார்ச் 10ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு துறையில் அளித்த புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ள ஆர்.எஸ். பாரதி, “பொது ஊழியருக்கு எதிராகப் புகார் அளித்தால் உடனடியாக விசாரணை நடத்தவேண்டிய கடமை உள்ளதால், ஒ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு தொடர்பான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரியுள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.