தொடர்ந்து அதிகரிக்கும் மேட்டூர் அணை நீர்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துவரும் நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 68000 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது.

தென்மேற்குப் பருவமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதால் அந்த அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் மேட்டூர் அணைக்கு கடந்த 25 நாட்களுக்கும் மேலாக வந்துகொண்டிருக்கிறது.

கேரளா மற்றும் கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மீண்டும் மழை பெய்வதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த இரு அணைகளும் ஏற்கனவே நிரம்பி விட்டதால் அவற்றுக்கு வரும் தண்ணீர் முழுவதும் உபரியாக காவிரி ஆற்றில் திறந்து விடப்படுவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 68000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு பின்னர், தற்போது 100 அடிக்கும் மேல் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து அணையின் கொள்ளளவு நிரம்பியுள்ளதால் சேலம் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே வேலையில் அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நேற்று இரவு 9 மணி நிலவரப்படி, விநாடிக்கு 67000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று (ஜூலை 28) காலை 10 மணியவில் 64000 கனஅடியாக உள்ளது. இதனையடுத்து ஒகேனக்கல்லில் தொடர்ந்து 20ஆவது நாளாக அருவிகளில் குளிக்கவும், பரிசல்களை இயக்கவும் தடை நீடிக்கப்படுள்ளது.

மேட்டூர் அணையினைப் பொறுத்தவரை, நீர் வரத்து 68500 கனஅடியாகவும், நீர்மட்டம் 120.30 அடி, நீர் இருப்பு 93.95 டிஎம்சியாவும் உள்ளது. விநாடிக்கு 68000 கனஅடி வீதம் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.