ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு கட்சியின் முக்கியஸ்தர் மீது துப்பாக்கி சூடு!
காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான குலாம் மொஹிதின் என்பவரின் வீடு புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட முரான் சவுக் அருகேயுள்ள ராஜ்போரா பகுதியில் உள்ளது.
இவரது வீட்டின்மீது இன்று அடையாளம் தெரியாத மர்மநபர்கள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தியதுடன் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களையும் பறித்துச் சென்றனர். இந்த தாக்குதலில் அங்கு காவலுக்கு நின்றிருந்த இரு போலீசார் படுகாயமடைந்தனர்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்களில் ஒருவரான முடாடிர் அஹமது என்பவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். உயிருக்கு போராடிய மற்றொரு போலீஸ்காரரான நசிர் அஹமது மேல்சிகிச்சைக்காக ஸ்ரீநகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துக்கு பின்னர் அப்பகுதியை முற்றுகையிட்டுள்ள போலீசார் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை