போரதீவுப்பற்று பிரதேசத்தில் அதிகரிக்கும் காட்டுயானைகளின் அட்டகாசங்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் காட்டுயானைகளின் அட்டகாசங்கள் அதிகரித்துள்ளதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இதனால், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் கவலையடைந்துள்ளனர்.

போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட நவகிரி 37 ஆம் கிராமத்துக்குள் இன்று புகுந்த மூன்று யானைகள் நான்கு வீடுகளை சேதப்படுத்தியுள்ளதுடன் வாழை, தென்னை மற்றும் பயிர்ச்செய்கைகளையும் சேதப்படுத்தியுள்ளன.

மேலும், வீடுகளை உடைத்தும் வீடுகளில் இருந்த நெல் மற்றும் கச்சான்களை உண்டும் பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளதுடன் ஒரு குடும்பம் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல காலமாக தாங்கள் காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகிவருவதாகவும் உயர் அதிகாரிகள் இது தொடர்பில் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த யுத்ததிற்கு பின்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட இந்தப்பகுதி மக்கள், யானைகளின் தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்கிவருவதாக தெரிவிக்கின்றனர்.

தினமும் இரவு வேளைகளை அச்சத்துடனேயே கழித்துவருவதாகவும் மிகவும் கஸ்டத்திற்கு மத்தியில் செய்கை பண்ணப்படும் உற்பத்தி பொருட்களை வைத்திருக்கமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

யானையின் தாக்குதலுக்குள்ளான பகுதிகளில் யானைகள் ஊடுருவல் இருப்பதற்கான யானை வேலிகள் அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இதுவரையில் வேலிகள் அமைக்கப்படவில்லையெனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

யானைகள் கிராமங்களுக்குள் வரும்போது வனஜீவராசிகளுக்கு அறிவித்தாலும் வருவதில்லையென தெரிவித்த அப்பகுதி மக்கள், யானைகளை துரத்தியடிப்பதற்காக எல்லைப்புற கிராமங்களில் இளைஞர்கள் தெரிவுசெய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களை கடமையில் ஈடுபடுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.