கருணாநிதியின் உடல்நிலையால் ஸ்டாலின் கவலை?

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. ஃபேஸ்புக் லொக்கேஷன் டெல்லியில் காட்டியது.
“ஒரு சின்ன ப்ளாஷ் பேக்கிலிருந்து ஆரம்பிக்கிறேன். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துகள் வாங்கிக் குவித்துள்ளதாகக் கடந்த மார்ச் 10ஆம் தேதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு அனுப்பியது நினைவிருக்கும். அந்த மனுவில், தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபை தேர்தலில் போட்டியிடும்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள சொத்துகளின் பட்டியலுக்கும் வருமான வரித் துறையில் செலுத்தியுள்ள சொத்துகளின் விவரங்களிலும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி, மகன்கள், மற்றும் மகளின் பெயரிலும் அவரது சகோதரர், குடும்பத்தினர் பெயரிலும் கோடிக்கணக்கான சொத்துகள் உள்ளன. இவை அனைத்தையும் வருமான வரித் துறைக்கு முறையாகத் தெரிவிக்கவில்லை.
ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு ஆகியோர் பல நிறுவனங்களில் இயக்குநர்களாக இருந்துள்ளனர். இவர்களது பெயரில் ரூ.200 கோடிக்கு முதலீடு செய்துள்ளதாக அறிகிறேன். இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, துருக்கி, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளிலும் சொத்துகள் வாங்கியுள்ளனர். தேனி மாவட்டத்தில் 99 ஏக்கர் இடத்தை அரசிடமிருந்து ஒரு நிறுவனம் 99 வருடக் குத்தகைக்கு எடுத்திருந்தது. குத்தகைக் காலம் 2012ஆம் ஆண்டு முடிந்த பிறகு சந்தை விலையைவிடக் குறைந்த விலைக்கு அதைப் பினாமி மூலம் வாங்கியுள்ளனர். இதன் மதிப்பு தோராயமாக ரூ.140 கோடி ஆகும். இதேபோல, மாந்தோப்பு உள்பட பல்வேறு விளை நிலங்களையும் வாங்கியுள்ளனர்.
மணல் காண்டிராக்டர் சேகர் ரெட்டியுடன் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேரடித் தொடர்பு உள்ளது. சென்னையிலும் பல நிறுவனங்களில் இவரது குடும்ப உறுப்பினர்கள் முதலீடு செய்துள்ளதோடு, பங்குதாரர்களாகவும் உள்ளனர். இவை அனைத்தையும் முறையாக வருமான வரித் துறைக்கு அவர் கணக்குக் காட்டவில்லை. எனவே வருமான வரித் துறை சட்டம், அந்நியச் செலாவணிச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டம், பினாமி சட்டம், ஆகிய சட்டங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டிருக்கிறார். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத் தாக்கல் செய்தார். மனுவில், வருமானம் குறித்துத் தவறான தகவல்களை வேட்புமனுவில் பன்னீர்செல்வம் கொடுத்திருப்பதாகவும், சேகர் ரெட்டியின் டைரியில் 4 கோடி ரூபாய் பணம் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, புகார் அளித்து 3 மாதங்களான நிலையில், எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன, என நீதிபதி கேள்வி எழுப்பினார். வருமான வரிச் சோதனையின்போது, சேகர் ரெட்டியிடமிருந்து சிக்கிய டைரியில் பன்னீர்செல்வம் பெயர் இடம் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, ’சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக் கூடாது’ எனவும் கேள்வி எழுப்பினார். அதாவது எந்த நேரத்திலும் பன்னீர்செல்வத்தின் ஊழல் புகாரை சிபிஐக்கு மாற்றலாம் என்பதுதான் நிலைமை.
இந்தச் சூழ்நிலையில்தான் நேற்று இரவு திடீரென டெல்லி கிளம்பி வந்தார் பன்னீர். டெல்லி பயணத்துக்கு பன்னீர் சில காரணங்களைச் சொன்னாலும், நிஜமான காரணம் பிஜேபி தலைவர்களைச் சந்தித்து, தன் மீதான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டாம் என்ற கோரிக்கை வைப்பதற்காகத்தான் என்கிறார்கள். பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து இது தொடர்பாகப் பேசுவதற்காகத்தான் இன்று எம்.பி. மைத்ரேயன், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் நிர்மலா சீதாராமன் அலுவலகத்துக்கு வந்தார் பன்னீர்.
பன்னீர் வந்திருக்கும் தகவல் நிர்மலா சீதாராமனுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. 45 நிமிடங்கள் அவர்கள் அனைவருமே காக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதன் பிறகு மைத்ரேயன் பெயரைச் சொல்லி அழைத்திருக்கிறார் அங்கிருந்த செக்யூரிட்டி. எல்லோரும் எழுந்து நிர்மலா அறைக்குள் நுழைய முயன்றபோது... மைத்ரேயனைத் தவிர எல்லோரும் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். ‘உங்க யாருக்கும் அனுமதி இல்லை. அவரு மட்டும் போகட்டும்..’ என்று பன்னீர் உட்பட எல்லோரையும் திருப்பி அனுப்பிவிட்டனர். பன்னீர் எவ்வளவோ பேசியும் அவரை அனுமதிக்காமல் திருப்பி வெளியே அனுப்பிவிட்டனர். அங்கிருந்து வெளியே வந்த பன்னீர், தமிழ்நாடு இல்லத்துக்குக்கூடப் போகாமல் நேராக டெல்லி விமான நிலையத்துக்குக் கிளம்பிவிட்டார்.
மைத்ரேயன் மட்டும் நிர்மலா அறைக்குள் போயிருக்கிறார். ‘வெளியில் துணை முதல்வர் இருக்கிறார்...’ என்று அவர் சொல்ல.. ‘நான் அவரை வரச் சொல்லவே இல்லையே... அவரு எதுக்கு வந்திருக்காருன்னு எனக்குத் தெரியும். அவரை இப்போ பார்க்க வேண்டாம் என்பது எங்க தலைமையின் உத்தரவு.’ என்று பளிச்செனச் சொல்லிவிட்டாராம். அதற்கு மேல் எதுவும் பேசாமல் போன வேகத்தில் திரும்பி வந்துவிட்டாராம் மைத்ரேயன். மத்திய உளவுத் துறை ஓ.பன்னீர்செல்வம் சிபிஐ வசம் வழக்கு போய்விடக் கூடாது என்பதற்காக உதவி கேட்டுத்தான் டெல்லி வருகிறார் என்ற தகவலை முன்கூட்டியே உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அனுப்பிவிட்டது. 
ராஜ்நாத்திடமிருந்து நிர்மலாவுக்கு இந்தத் தகவல் போன காரணத்தால்தான் அவர் சந்திக்க மறுப்புத் தெரிவித்திருக்கிறார். அதோடு, ஸ்டெர்லைட் விவகாரத்தில் பன்னீர்செல்வத்துக்கு உள்ள தொடர்பும் ராஜ்நாத் சிங்கிடம் முழு ஆவணங்களாக இருக்கின்றதாம். இதனால்தான் நம்பிக்கை வாக்கெடுப்பில் பிஜேபிக்கு ஆதரவாக வாக்களித்தும்கூட, எடப்பாடி மற்றும் பன்னீர் மீதுள்ள கோபம் பிஜேபிக்கு இன்னும் கொஞ்சமும் குறையவில்லை என்பது பன்னீரை அவமானப்படுத்தியதிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது.” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ். அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது வாட்ஸ் அப்.
தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றையும் டைப்பிங் செய்தது வாட்ஸ் அப். “சில தினங்களுக்கு முன்பு ’செக்கப்’ செய்வதற்காகக் காவேரி மருத்துவமனைக்குச் சென்று ஒரே நாளில் வீடு திரும்பினார் திமுக தலைவர் கருணாநிதி. கடந்த 15 நாட்களாகவே அவர் சோர்வாகவே இருக்கிறார். படுக்கையிலிருந்து தூக்கி உட்கார வைத்தாலும், உட்காராமல் படுத்துக் கொள்கிறாராம். சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனைக்குச் சென்றபோது அவரைப் பரிசோதித்த மருத்துவர்களும், சில தகவல்களைச் சொல்லியே அனுப்பியிருப்பதாகச் சொல்கிறார்கள். மருத்துவமனைக்குப் போய்விட்டு வந்த பிறகு, ஸ்டாலின், செல்வி, தமிழரசு என நெருக்கமானவர்கள் வந்து கூப்பிட்டாலுமே ரெஸ்பான்ஸ் செய்யாமல் அமைதியாகவே இருக்கிறாராம் கருணாநிதி.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருணாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் இப்போது அதற்கு நேர்மாறாக நாளுக்கு நாள் அவரது உடல் துவண்டபடியே இருப்பதை அருகிலிருந்து பார்ப்பவர்கள் கவலையோடு சொல்கிறார்கள். கோபாலபுரத்துக்கு வந்து கருணாநிதியைப் பார்த்த ஸ்டாலின், தனது உறவினர்களை உடனடியாக வீட்டுக்கு வரவழைத்துப் பேசியிருக்கிறார். ‘அவரு இப்படி இருந்து நான் பார்த்ததே இல்லை. வீட்டில் வைத்தே சிகிச்சை கொடுக்கலாமா... இல்லை மருத்துவமனையில் சேர்க்கலாமா?’ என்று கவலையுடன் கேட்டாராம். ஒவ்வொருவரும் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டாராம் ஸ்டாலின்.” என்று முடிந்தது மெசேஜ்.
“கருணாநிதி நலம் பெறட்டும்!” என்று ரிப்ளை செய்துவிட்டு லாக் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.