ஸ்டெர்லைட் ஆலை திறப்பா?

ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றிய ஊழியர்களை இன்று உடனே பணிக்குத் திரும்புமாறு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுகிறதா என்னும் யூகத்தை இது ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மக்கள் நடத்திய போராட்டத்தின் கடைசி நாளில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில், 13 பேர் பலியாகினர் மற்றும் பலர் காயமடைந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மே 28ஆம் தேதி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆலையை மூடி சீல் வைத்தார். இந்த அரசாணையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் மனு தாக்கல் செய்யக் கூடாது என்பதற்காக, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தது

அதில், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பான ஆணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவுகளை பிறப்பிக்கக் கூடாது என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் மறுப்பு தெரிவித்துவிட்டது. வேதாந்தா குழுமத்தின் மனுவுக்கு வரும் 18ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஒப்பந்ததாரர்களும் ஆலையை திறக்க‌ வலியுறுத்தி மனுக்கள் கொடுத்துவருகின்ற‌னர்.

ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்குவது குறித்து அரசு ஆலோசனை நடத்தி, அந்த ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்க தனி இணையதளத்தையும் மாவட்ட நிர்வாகம் தொடங்கியது.

ஸ்டெர்லைட் ஆலை மூடி 45 நாட்கள் ஆகியுள்ள நிலையில், ஊழியர்களை இன்று உடனே பணிக்கு திரும்புமாறு ஆலை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆலையில் வந்து ஊழியர்கள் தங்கள் வருகையைப் பதிவு செய்யவும் நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்கள் இன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு கொடுக்கவுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.