கரிபீயன் பிரீமியர் லீக்: கயானா அமெசோன் அணி வெற்றி!

கரிபீயன் பிரீமியர் லீக் ரி-ருவென்ரி தொடரின், 19ஆவது லீக் போட்டியில், கயானா அமெசோன் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

சென்.கிட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், கயானா அமெசோன் அணியும், சென்.கிட்ஸ்-நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கயானா அமெசோன் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய சென்.கிட்ஸ்-நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ஓட்டங்களை பெற்றது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக கிறிஸ் கெய்ல் 40 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைதொடர்ந்து, 169 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கயானா அமெசோன் அணி, 19.5 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக சொயில் டன்வீர் ஆட்டமிழக்காது 37 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் கார்லோஸ் பிரத்வெயிட் மற்றும் பென் கட்டிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக சொயில் டன்வீர் தெரிவுசெய்யப்பட்டார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.