இராணுவ மயமாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன!

இலங்கையை இராணுவ மயமாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிணைந்த பொது எதிரணியினரால் இன்று(வியாழக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘ஜனபல சேனா’ ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இன்று ஆசியாவிலேயே இலங்கையில்தான் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக, பொலிஸ் மா அதிபர் கூறுகிறார். கொலை, பாலியல் துஸ்பிரயோகம் அதிரத்துள்ளதாக கூறுகிறார்.

ஆனால் பிரதமரோ அப்படி இல்லை. குற்றச்செயல்கள் குறைந்துள்ளதாக கூறுகிறார். இவர்கள் இருவரும் முரணான கருத்துக்களைக் தெரிவித்து வருகின்றனர்.

இன்று இராணுவத்தினருக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கப் போகின்றனர். போதைப்பொருள் தொடர்பில் மக்கள் மத்தியில் ஒரு விதமான மனநிலை ஏற்பட்டுள்ளது.

அதனைக் காரணமாக கொண்டு போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்த இராணுவத்தினருக்கு அதிகாரத்தை வழங்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாளை கொலைகள் அதிகரித்துள்ளதாக கூறியும், பின்னர் குடும்பப் பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டும் என்று கூறியும், இராணுவத்திற்கு பொறுப்பினை வழங்குவார்கள்.

இதுதான் நாட்டை இராணுவ மயமாக்கும் வேலைத்திட்டத்தின் முதல்படி. இராணுவத்திற்கு நாடாளுமன்றத்தின் ஊடாக அதிகாரத்தை வழங்க முயற்சிக்கிறார்கள். இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்திரமன்றி, சுதந்திரக்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிந்திக்க வேண்டும்.

இராணுவ மயமாக்கும், இந்த திட்டம் குறித்து நாம் விசேட அவதானம் செலுத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.