பொருளாதார நன்மையும் முக்கியமான விடயமே!
அரசியல் தீர்வு முதன்மையா னது. அதற்கான முயற்சிகள் ஒரு தளத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. அதேவேளை மக்களின் அடிப்படைப் பிரச்சினை களுக்குத் தீர்வு காண்பதற்கு பொருளாதார நன்மையும் முக்கியமானது.
ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் உரிய பிரச்சினை கள் தீர்க்கப்படவேண்டும். அதற்காகவே வடக்கு, கிழக்கு அபிவிருத் திக்கான அரச தலைவர் செயலணியில் பங்கேற்க முடிவு செய்துள்ளதாக கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு அரச தலைவர் செயலணியில் 48 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். வடக்கு மாகாண முதலமைச்சர் அதில் உள்வாங்கப்பட்டிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடக்கப்படவில்லை.
செயலிணியின் முதலாவது கூட்டத்தின் பின்னர் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புக்கு அமைவாக, கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது.
அபிவிருத்திச் செயலணியில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பங்கேற்கவேண்டாம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் கோரியிருந்தார். அவரது கோரிக்கையை நிராகரித்து செயலணியில் பங்கேற்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்ததாவது- வடக்கு, கிழக்கில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் உள்ளன. அவை தொடர்பில் பேசப்பட்டு தீர்வு காணப்படவேண்டும்.
அரசியல் தீர்வுக்கான முயற்சி இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அது வேறு தளத்தில் நடக்கின்றது. அதுதான் முதன்மையானது. அந்த விடயம் முக்கியமானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதுவரை எமது மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்காமல் இருக்க முடியாது. எமது மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும்.
வெறுமனே அரசியல் தீர்வு வேண்டும் என்று கூறிக்கொண்டு எமது மக்களின் பிரச்சினைகளைக் கைவிட முடியாது. அரசியல் தீர்வு பெற்றுக்கொள்வதை போலவே எமது மக்களின் தேவைகளையும் பூர்த்திசெய்ய வேண்டும்.
வடக்கு முதல்வர் கூறிய காரணிகளை விடவும் மக்களின் நிலமைகளை நாம் கருத்தில் கொண்டு இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளத் தீர்மானம் எடுத்துள்ளோம் – என்றார்.
கருத்துகள் இல்லை