உற்பத்தி மேம்பாடு குறித்து கருத்தரங்கம்!

உற்பத்திப் பொருட்களின் வடிவமைப்பு மற்றும் மதிப்பு மேம்படுத்துதல் பற்றிய ஒருநாள் கருத்தரங்கம் நடத்தப்படுவதாக தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ‘சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வடிவமைப்பு பற்றிய நுணுக்கங்களை அறிந்து கொள்ளும் வகையில் வரும் செப்டம்பர் மாதம் சென்னை, கோவை மற்றும் மதுரையில் ஒரு நாள் கருத்தரங்கம் நடத்தப்படவுள்ளது. இக்கருத்தரங்கில் வடிவமைப்புத் துறை சார்ந்த வல்லுநர்கள் கலந்துகொண்டு பயிற்சி அளிக்க உள்ளனர். இக்கருத்தரங்கில் பல்வேறு தரப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கலந்துகொண்டு பயன்பெற இயலும்.
பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இதில் பங்கேற்க இந்த மாதம் 31ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தன்னாட்சி சேவை நிறுவனமாகச் செயல்படும் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமானது 2001ஆம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பட்டது. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தொடர்ந்து கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளை இந்த நிறுவனம் நடத்தி வருகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.