வலி. வடக்கில் இன்னமும் 6 பாடசாலைகள் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில்!

2015 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதாவது கடந்த மூன்றாண்டுகளில் வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 2,800 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் இந்த வருடத்தில் மட்டும் 872 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. இன்னமும் ஆறு பாடசாலைகள் விடுவிக்கப்படாமல் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கின்றன என வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.
இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த மயிலிட்டி கலைமகள் வித்தியாலயத்தை விடுவிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் மயிலிட்டிக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மயிலிட்டி கலைமகள் பாடசாலையை விடுவிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய அந்தப் பாடசாலையை இரண்டு வாரத்துக்குள் விடுவிப்பதாக அவர் உறுதியளித்திருந்தார்.
அதனடிப்படையில் இன்று அந்தப் பாடசாலை விடுவிக்கப்பட்டிருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு நாட்டில் ஆட்சி மாற்றமொன்று ஏற்படுவதற்கு முன்னர் வலிகாமம் வடக்கில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் 6,300 ஏக்கர் நிலப்பரப்பு இருந்தது.
ஆனால், ஆட்சி மாற்றத்தின் பின்னரான கடந்த மூன்றாண்டுகளில் 2,800 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப் பட்டிருக்கின்றது.
அதிலும் இந்த வருடத்தில் மட்டும் 872 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. இன்னமும் ஆறு பாடசாலைகள் விடுவிக்கப்படாமல் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கின்றன.
குறிப்பாக மயிலிட்டி ஆர்.சி., வயாவிளான் சிறிவேலுப்பிள்ளை வித்தியாசாலை, பலாலி சித்திவிநாயகர், பலாலி அமெரிக்கன் மிசன், காங்கேசன்துறை ஆர்.சி.,காங்கேசன்துறை மகாவித்தியாலயம் போன்ற பாடசாலைகளே விடுவிக்கப்படாமல் உள்ளன.
இதேபோன்று வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தலைமை அலுவலகமும், சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானங்கள் உட்பட பல இடங்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
ஆகவே, அந்தக் காணிகளும் பாடசாலைகளும் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும். அதனூடாக வலிகாமம் வடக்கின் மீள்குடியேற்றம் துரிதமாக நடக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.