மீண்டு வந்த ‘தேவ்’ படக்குழு!

கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் இணைந்து நடிக்கும் தேவ் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் பெருமழை காரணமாகத் தடைப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கவுள்ளது.

குலு மணாலியில் ஏற்பட்ட பெருமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக பலரும் பாதிக்கப்பட்டனர். பெருமளவில் பொருட்சேதமும் ஏற்பட்டது. இதனால் தேவ் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டதுடன் படக்குழுவினரும் அங்கிருந்து வரச் சிரமப்பட்டனர். இந்தத் தகவலை கார்த்தி கடந்த திங்கள் கிழமை (செப்டம்பர் 24) அறிக்கை வாயிலாக வெளியிட்டார். மறுநாள் கார்த்தி உள்ளிட்ட சிலர் சென்னை திரும்பினர். இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் அவர்களது குழுவினர் மணாலியில் தங்கினர். சாலை வசதி, மின் இணைப்பு இல்லாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.

தற்போது இயக்குநர் ரஜத் ரவி சங்கர், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் உள்ளிட்டோர் புனே சென்றுள்ளனர். எஞ்சிய படக்குழுவினர் சண்டிகரில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இன்று (செப்டம்பர் 27) அவர்களும் புனே செல்லவுள்ளனர். இந்த வார இறுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பாடல்காட்சி ஒன்று படமாக்கப்படவுள்ளது. பயணப்பாடலாக அது உருவாகிறது. மற்றும் சில காட்சிகளும் அங்கு படமாக்கப்படவுள்ளன. விரைவில் கார்த்தியும், ரகுலும் படக்குழுவுடன் இணையவுள்ளனர்.

இதைத் தொடர்ந்து படக்குழு மீண்டும் குலு மணாலி சென்று எஞ்சிய காட்சிகளைப் படமாக்கத் திட்டமிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.