தீவிரவாதிகளிடம் கெஞ்சிய தாய்!

ஜம்மு காஷ்மீரில் 4 காவல் துறை அதிகாரிகளை கடத்திச் சென்ற தீவிரவாதிகள், 3 பேரைச் சுட்டுக் கொன்றனர். இறந்த காவல் துறை அதிகாரி நிசார் அகமதுவின் தாயார், ’என் மகனை விட்டு விடுங்கள்’ என்று
தீவிரவாதிகளிடம் கெஞ்சிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்தில், கடந்த செப்டம்பர் 21ஆம் தேதியன்று அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 3 காவல்துறை உயர் அதிகாரிகளும், 1 காவலரும் மாயமாகினர். அவர்களில் 2 உயர் அதிகாரிகள் மற்றும் 1 காவலர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தகவல் கிடைத்ததும், பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இந்த தாக்குதலுக்கு ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. தப்பி ஓடிய தீவிரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் தேடி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. பிர்தவுஸ் அகமது, குல்வந்த் சிங், நிசார் அகமது ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிய வந்துள்ளது.
நிசார் அகமதுவின் வீட்டில் கடத்தல் சம்பவம் நடந்தபோது, அவரை விட்டுவிடுமாறு அவரது தாயார் சைதா பேகம் கதறியுள்ளார். காவல் துறை பணியில் இருந்து இன்றே நிசார் அகமது ஓய்வு பெறத் தயாராக உள்ளார் என்று கெஞ்சியுள்ளார். ஆனால், அதை ஏற்க மறுத்த தீவிரவாதிகள் நிசார் அகமதுவைக் கடத்திச் சென்றனர்.
இதனையடுத்து, என் மகனை விட்டுவிடுங்கள் என்று நிசார் அகமதுவின் தாயார் கெஞ்சிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. ஆனாலும், தீவிரவாதிகளின் மனம் மாறவில்லை. நிசாரின் உயிரிழப்பு, அவரது குடும்பத்தினரை நிலைகுலைய வைத்துள்ளது.
மனைவி, இரண்டு குழந்தைகள், வயதான பெற்றோர் ஆகியோருடன் வாழ்ந்து வந்தார் நிசார் அகமது. அவரது வயது 44. என சிறு குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.