தொழில்நுட்பப் பணிகளை வழங்கும் ஓயோ!
அடுத்த 2 ஆண்டுகளில் 2,020 தொழில்நுட்ப வல்லுநர்களை நியமிக்க ஓயோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தங்கும் அறைகளுக்கான முன்பதிவு சேவைகளை ஓயோ நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிறுவனத்துக்கு தற்போது 2,900 ஊழியர்கள் இருக்கிறார்கள்.
தற்போது இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இந்நிறுவனம் தனது சேவையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக அடுத்த 2 ஆண்டுகளில் சீனா, இந்தோனேசியா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் சேவை வழங்க திட்டமிட்டுள்ளது. இதனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2,020 தொழில்நுட்ப வல்லுநர்களைப் பணியமர்த்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஓயோ நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரிதேஷ் அகர்வால் மிண்ட் ஊடகத்திடம் பேசுகையில், “தொழில்நுட்பப் பணிகளான செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், இணையம் சார்ந்த பொருட்கள் போன்ற துறைகளில் புதிதாக 2,020 பேரை இணைக்கத் திட்டமிட்டுள்ளோம். எங்களின் பங்குதாரர்களானவர்களுக்கு நிலையான வருவாய் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகள் கிடைப்பதை நாங்கள் உறுதிபடுத்துவோம்” என்றார். தற்போது இந்நிறுவனம் 230 நகரங்களில் தனது சேவைகளை வழங்கி வருகிறது.
கருத்துகள் இல்லை