தமிழறிஞர் கி.த.பச்சையப்பன் காலமானார்!

தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழகத் தமிழாசிரியர் கழக முன்னாள் தலைவருமான தமிழறிஞர் கி.த.பச்சையப்பன் சென்னையில் இன்று (செப்டம்பர் 20) காலமானார். அவருக்கு வயது 85.
புதுச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னை, வண்ணாரப்பேட்டையில் வசித்துவந்தார். இன்று காலையில் ஒரு வழக்குக்காக உயர் நீதிமன்றத்துக்குச் சென்றுகொண்டிருந்தவருக்கு, 10.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவரின் உயிர் பிரிந்தது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அரசுப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றிய கி.த.பச்சையப்பன், தமிழாசிரியர் கழகத்தின் மாநிலப் பொறுப்பாளராக நீண்ட காலம் செயல்பட்டார். பள்ளி ஆசிரியராக மட்டுமின்றி, தனித்தமிழைப் பாதுகாக்கும் பல்வேறு கருத்தரங்குகள், கூட்டங்கள், உரையரங்கங்களில் பச்சையப்பனின் குரல் ஒலித்தபடி இருந்தது.
பத்திரிகை உலகில் குறிப்பிடத்தக்கபடியாக, ‘தமிழ் ஓசை’ நாளேட்டில் மொழி நடை ஆசிரியராகப் பணியாற்றி, அன்றாடச் செய்தியில் தனித்தமிழ்ச் சொற்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்ததில், புலவர் கி.த.பச்சையப்பனுக்கு முக்கிய பங்கு உண்டு. அதன் தாக்கத்தில் இன்றைய 24 மணி நேரத் தொலைக்காட்சிகளில் தனித்தமிழ்ச் சொற்கள் புழக்கத்துக்கு வந்தன.
அரசுப் பணியில் இருந்தபோதும், தமிழ் மொழி, இனப் பிரச்சினைகள் தொடர்பான போராட்டங்களில் அதிக அளவில் கலந்துகொண்டார். 1999ஆம் ஆண்டு தமிழ்வழிக் கல்விக்காக நூறு தமிழறிஞர்கள் கலந்துகொண்ட சாகும்வரை உண்ணாவிரதத்தில் முன்னிலையாகப் பங்கேற்றார். பின்னர், அப்போதைய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் அழைத்துப் பேசி, அந்த உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தையில் இவர் முக்கியமாகப் பங்கேற்றார். பின்னர், சக தமிழறிஞர்களுடன் திரளாக டெல்லிக்குச் சென்று செம்மொழியாகத் தமிழை அறிவிக்குமாறு கோரி 2002 காலகட்டத்தில் போராட்டம் நடத்தினார். அதையடுத்தே அப்போதைய பா.ஜ.க. அரசு, அந்தக் கோரிக்கையை ஏற்பதாக அறிவித்தது.
இவர் இந்திய சுதந்திர போராட்டத்திலும் கலந்து கொண்டவர். கணினி, செல்பேசிகளில் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்த ஆங்கிலத்திற்குப் பதிலாக தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர் பச்சையப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈழத்தமிழர்களுக்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த, இவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தன்னலம் இன்றி பொதுவாழ்வுக்கு தன்னை ஒப்படைத்துக் கொண்டு பாடுபட்ட பச்சையப்பனின் மறைவுச் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். புலவர் கி.த ப மறைவு பேரிழப்பு எனக் கூறியுள்ள வைகோ அவரது உற்றார் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
பகுத்தறிவு மற்றும் தன்மான உணர்வை காலமெல்லாம் தமிழர்க்கு ஊட்டிய கி.த.பச்சையப்பன் உயிரிழந்தது தமிழ்க்குடிக்கே பேரிழப்பு எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.