அம்ருதாவுக்கு ஆறுதல் கூறிய கெளசல்யா

தெலங்கானாவில் ஆணவக்
கொலையால் கணவனை இழந்த அம்ருதாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார் கெளசல்யா.
தெலங்கானாவில் வெவ்வேறு சாதியை சேர்ந்த பிரனய் குமாரும், அம்ருதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சாதி மறுப்பு திருமணம் என்பதால், பெண் வீட்டாரிடம் இருந்து பெரிய எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் அம்ருதாபிரனய் இருவரும் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, திரும்பியபோது சுபாஷ் சர்மா என்ற கூலிப்படை கொலையாளி, பிரனயை பின்னிருந்து தாக்கி, கழுத்தில் அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இந்த வழக்கில் அம்ருதாவின் தந்தை, சித்தப்பா உள்ளிட்ட 7 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார்.
இந்நிலையில், தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால், தனது கணவனை இழந்த கெளசல்யா, தெலங்கானாவில் தனது கணவர் வீட்டிலிருக்கும் அம்ருதாவை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
அம்ருதாவிடம் பேசிய கெளசல்யா தைரியமாக இருக்க வேண்டும் என்று ஆறுதல் கூறிவிட்டு, தனது கணவர் படுகொலை செய்யப்பட்ட வீடியோவை அம்ருதாவிடம் காட்டினார்.
அப்போது அம்ருதா, உங்கள் கணவர் கொலை செய்யப்படுவதற்கு சாதிதான் காரணமா என்று கேட்டதற்கு, சாதி மட்டும் தான் சங்கரை கொலை செய்தது என்று கௌசல்யா கூறினார். மேலும், ஆணவக் கொலை செய்த கௌசல்யாவின் பெற்றோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை கௌசல்யா 56 முறை எதிர்த்ததாக அவரது வழக்கறிஞா் தெரிவித்தார்.
பின்னா் பிரனய் கொலைக்கு காரணமாக இருந்த 7 பேரும் தூக்கிலிடப்பட வேண்டும் என அம்ருதா கூறினார். மேலும், “எனது மாமா, சித்தப்பா சிறையிலிருந்து வெளியே வந்தால், எனக்கும் என் குழந்தைக்கும் ஆபத்து” என அம்ருதா கூறினார்.
"நடந்த சம்பவம் அனைத்தையும் நீதிமன்றத்தில் சொல்லுங்கள். குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். வழக்குகளை சந்திக்கலாம் வா" என்று கெளசல்யா ஆறுதல் அளித்துள்ளனர்.
இந்த வழக்கில் எப்படி போராட வேண்டும். வழக்கு விசாரணையில் எப்படி உறுதியாக இருக்க வேண்டும் என்று வழக்கறிஞர் அம்ருதாவிற்கு அறிவுரை கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.