வெற்றிமாறன் படத்தில் மனிஷா

வெற்றிமாறன் தயாரிக்கும் புதிய படத்தில் மனிஷா யாதவ் முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
கிராமப்புற வேடங்களுக்கும் மாடர்ன் கதாபாத்திரங்களுக்கும் பொருந்தக்கூடிய நடிகைகள் தமிழ் சினிமாவில் வெகு சிலரே உள்ளனர். அவர்களில் மனிஷா யாதவ்வுக்கு முக்கிய இடம் உள்ளது. வழக்கு எண் 18/9 மூலம் அறிமுகமான அவர், அந்தப் படத்தில் பள்ளி மாணவியாக நடித்து கவனம் ஈர்த்தார். ஆதலால் காதல் செய்வீர் படத்தில் கல்லூரி மாணவியாக வலம்வந்த அவர், ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தில் கிளாமர் வேடத்தில் நடித்து வித்தியாசம் காட்டினார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஒரு குப்பை கதை படம் விமர்சனரீதியாக வரவேற்பு பெற்றது. அதைத்தொடர்ந்து இரு படங்களில் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.
திருநாள் படத்தை இயக்கிய ராம்நாத் இயக்கும் அடுத்த படத்தை வெற்றிமாறன் தயாரிக்கிறார். துப்பறியும் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் கிராமப்புறத்தைச் சேர்ந்த பெண்ணாக மனிஷா நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கவுள்ளது.
இதுதவிர அறிமுக இயக்குநர் மில்கா செல்வகுமார் இயக்கும் சண்டா முனி படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ராகவா லாரன்ஸின் உதவியாளரான செல்வகுமார் இந்தப் படத்தை சமீபத்தில் வெளியான பாலிவுட் திரைப்படமான ‘ஸ்ட்ரீ’ பாணியில் உருவாக்கவுள்ளார். ஹாரர் காமெடியில் தயாராகும் இந்தப் படத்தில் நட்ராஜ், யோகி பாபு நடிக்கின்றனர். அக்டோபர் முதல் வாரம் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.