கைகொடுப்பாரா குறும்பட இயக்குநர்?

நடிகர் ஜெயம் ரவி நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

ஜெயம் ரவி, ராஷி கன்னா காம்போவில் அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் படமான ‘அடங்க மறு’ விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் 'அப்பா லாக்' (App(a) Lock) எனும் குறும்படத்தை இயக்கியதன் வாயிலாகக் கவனம் பெற்ற இயக்குநரான பிரதீப் ரங்கநாதன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி.

காஜல் அகர்வால் முதன்முறையாக ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்கும் இந்தப்படத்தை வேல்ஸ் ஃபில்ம் இன்டெர்நேஷனல் சார்பாக ஐசரி கே கணேஷ் தயாரிக்கிறார். ரிச்சர்டு எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு இசையமைக்க ஹாரிஸ் ஜெயராஜுடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகக் கூறப்படுகிறது. கே.எஸ் ரவிக்குமார், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்டோர் இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.



இந்நிலையில் இப்படத்திற்கான பூஜை இன்று (செப்டம்பர் 20) சென்னையில் நடைபெற்றுள்ளது. இதையொட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ள இப்பட ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு எம் நாதன், கடும் உழைப்பாளியான ஜெயம் ரவியுடனும் புதிய மற்றும் எனர்ஜிடிக் இயக்குநரான பிரதீப்புடன் இணைந்து புதிய பயணத்தைத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் வேல்ஸ் ஃபில்ம் தயாரிக்கும் இந்தப்படத்தில் பங்குபெற்றிருப்பது குறித்தும் மகிழ்ந்துள்ளார். இந்தப் படத்திற்காக ஜெயம் ரவி சுமார் 20 கிலோ எடையைக் குறைப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்தப் படத்தையடுத்து இயக்குநர் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன்-2வில் ஜெயம் ரவி நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.