வைரமுத்துவை குற்றம் சாட்டுவதன் பின் அரசியல் - சீமான்!

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி எழுப்பியுள்ள குற்றச்சாட்டின் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தேகித்துள்ளார்.

மீடூ என்ற ஹேஸ்டேக்கில் பல துறைகளில் உள்ள பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, வைரமுத்து மீது சின்மயி பாலியல் புகார்களை தெரிவித்து வருகிறார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தன் மீது வழக்குத் தொடர்ந்தால் சந்திக்க தயார் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சீமான், “வைரமுத்து தமிழ் இனத்தின் அடையாளம். அவர் மீது இப்போது இந்த குற்றச்சாட்டை சொல்வதால், இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா? என எண்ணத் தோன்றுகிறது. எல்லா கற்களும் வைரமுத்துவை நோக்கியே திரும்புவது ஏன்? பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் மீதான குற்றச்சாட்டு குறித்து பலரும் பேச மறுப்பது ஏன்? பல்வேறு பாலியல் வன்கொடுமைகள் தமிழகத்தில் நடைபெற்றபோது, இவ்வளவு குரல் வராதது ஏன்? நியாயவாதிகளும், குற்றமற்றவர்களும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்படுகிறார்கள். சின்மயி புதிய தலைமுறை நேர்காணலில் சட்டப்படி நடவடிக்கை இதற்கு எடுக்க முடியாது என்கிறார். அப்போது வைரமுத்துவிற்கு அரசியல் செல்வாக்கு இருந்தது என்கிறார். அப்போதைவிட இப்போதுதான் வைரமுத்துவிற்கு அதிக செல்வாக்கு உள்ளது. குழு அமைத்து பெண்களை பாதுகாக்க வேண்டிய நிலை வந்ததற்கு நாம் வருத்தப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.