ஆவா குழுவை கோப்பாய் பொலிஸாரே உருவாக்கினர்!

”ஆவா குழுவை கோப்பாய் பொலிஸாரே உருவாக்கினர்.வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டை மீட்டதாக பொய் வழக்கைப் போட்டவர்களும் அவர்கள்தான்” என மூத்த சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.


கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆடியபாதம் வீதியில் இளைஞன் ஒருவரைத் தாக்கி காயம் ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டில் 4 இளைஞர்கள் கடந்த வாரம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, நேற்று (வியாழக்கிழமை) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

நேற்று குறித்த  இளைஞர்கள் நால்வரும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் பதில் நீதவான் வி.ரி.சிவலிங்கம் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போது, சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸ், மன்றில் பிணை விண்ணப்பம் செய்தார்.

அவர் அதில் தெரிவித்துள்ளதாவது, “ஆவா குழு என்ற ஒன்றை கோப்பாய் பொலிஸாரே உருவாக்கினர். இளைஞர்களுக்கு இடையிலான மோதலை வைத்து அவர்களை ஆவா குழுவென அடையாளப்படுத்தி இன்று அது பெரும் வன்முறைகளுக்கு வழிவகுத்துள்ளது.

அதேபோன்று வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டு ஒன்றை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டை மீட்டதாக பொய் வழக்கைப் போட்டவர்களும் கோப்பாய் பொலிஸார்தான்.

ஆகையால் அவர்களால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் அப்பாவிகள். அவர்களைப் பிணையில் விடுவிக்கவேண்டும்” என்று சட்டத்தரணி விண்ணப்பம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து வழக்கை ஆராய்ந்த பதில் நீதவான், பிரதான நீதவான் முன்னிலையில் பிணை விண்ணப்பத்தை முன்வைக்குமாறு தெரிவித்து சந்தேகநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 25ஆம் திகதிவரை நீடித்து உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் நால்வரும் இளைஞன் ஒருவரை துரத்திச் சென்றபோது, அந்த இளைஞன் தப்பிக்க கிணறு ஒன்றுக்குள் குதித்துள்ளார். கிணற்றுக்குள் வீழ்ந்த இளைஞன் மீது சந்தேகநபர்கள் நால்வரும் கற்களால் தாக்கினர் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.