மாணவியின் கல்வி: முதல்வர் உறுதி!

100 நாள் வேலைதிட்டத்தில் பணியாற்றி வந்த, பெற்றோரை இழந்த மாணவி ஒருவர் தொடர்ந்து படிப்பதற்கான செலவை மாநில அரசே ஏற்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


ஈரோடு மாவட்டம் காளிதிம்பம் கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரின் மகள் சிவரஞ்சனி. இவர், கோவை அரசு கலைக்கல்லூரியில் பிஏ படித்து வந்தார். பெற்றோர் மறைவுக்கு பிறகு, சிவரஞ்சனி தன்னுடைய சகோதரர் ஹரிபிரசாந்தைப் படிக்க வைக்கும் முயற்சியில் இறங்கினார். இதற்காக, தன்னுடைய படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, 100 நாள் வேலை திட்டத்திற்குச் சென்று வந்தார். தனக்கு அரசு வேலையோ அல்லது தொடர்ந்து படிப்பதற்கு உதவியோ செய்ய வேண்டும் என்று ஊடகங்கள் மூலமாகத் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்டோபர் 23) அறிக்கை வெளியிட்டார். அதில், கடந்த 21ஆம் தேதியன்று சிவரஞ்சனியின் பேட்டியைத் தொலைக்காட்சியில் பார்த்ததாகக் குறிப்பிட்டார். “ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறை கொண்டது தமிழக அரசு. சிவரஞ்சனி தொடர்ந்து கோவை அரசு கலைக்கல்லூரியில் படிப்பதற்கும், அவருடைய சகோதரர் ஹரிபிரசாந்த் தாளவாடி உண்டு உறைவிடப்பள்ளியில் தொடர்ந்து படிப்பதற்கும் தகுந்த நடவடிக்கை எடுப்பது மட்டுமில்லாமல், இருவரின் படிப்புக்கு ஆகும் செலவையும் அரசே ஏற்கும். இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளேன்” என்று அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.