கிளிநொச்சி மத்திய பேருந்து நிலைய் கைவிடப்பட்ட நிலையில்!

 கிளிநொச்சி நகரில் அமைக்கப்பட்டு வந்த மத்திய பேரூந்து நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் பல மாதங்கள் கைவிடப்பட்டுள்ள நிலையில் காணப்படுகிறது. இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வடக்கு மாகாணத்தின் மத்தியில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்டம், ஏனைய மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகள் நிறுத்திச் செல்கின்ற இடமாக காணப்படுகிறது. ஆனால் மத்திய பேருந்து நிலையம் இதுவரை அமைத்துமுடிக்கப்படவில்லை.

கடந்த வருடம் கிளிநொச்சி டிப்போ சந்திக்கருகில் மாவட்டத்திற்கான மத்திய பேரூந்து நிலையம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் குறித்த பேருந்து நிலையம் எந்த திணைக்களத்தினால், எவ்வளவு நிதி ஒதுக்கீட்டில், என்ன வடிவமைப்பில் அமைக்கப்படுகிறது என்ற எந்த விபரங்களும் காட்சிப்படுத்தப்படவில்லை.

அத்தோடு பேருந்து கட்டுமானப் பணிகளும் குறுகிய காலத்திற்குள் பல தடவைகள் தடைப்பட்டு வந்த நிலையில் தற்போது பல மாதங்களாக எந்த பணிகளும் இன்றி காணப்படுகின்றன.

இவ்விடயம் தொடர்பில் பல தடவைகள் மாவட்ட அபிவிருந்தி ஒருங்கிணைப்புக் குழுவின் கவனத்திற்குக் கொண்டுசென்றபோதும் இது கவனத்தில் எடுக்கப்படவில்லை.

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தை தொடர்புகொண்டு வினவிய போது குறித்த பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்றும் அதற்கும் மாவட்டச் செயலகத்திற்கும் தொடர்பில்லை என்றும் இதுதொடர்பில் வடக்கு மாகாண போக்குவரத்து ஆணைக்குழுவையே வினவவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஒரு நிரந்தர பேருந்து நிலையம் இன்றி வெயில் மற்றும் மழைக்காலங்களில் உள்ளுர், வெளியூர் பயணிகள் கடும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.