சர்காருக்கு ரெட் கார்டா?

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்திற்குத் தடை விதிக்கக் கூறித் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் குறும்பட இயக்குநர் ராஜசேகர் மனு அளித்துள்ளார்.


தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் வெளியாக உள்ளது. படத்தின் புரொமோஷன் பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில் படத்தின் கதை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை நீதிமன்றத்தை எட்டியுள்ளது. வருண் ராஜேந்திரன் தனது செங்கோல் கதையை சர்கார் திரைப்படமாக எடுத்திருப்பதாகக் கூறி நீதிமன்றத்தை நாடியுள்ளார். தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கமும் இரு கதைகளும் ஒன்றே எனக் கூறியுள்ளது. உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நாளை (அக்டோபர் 30) நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தனது தாகபூமி என்ற குறும்படத்தை தான் முருகதாஸ் கத்தி திரைப்படமாக உருவாக்கியுள்ளார் என்று குறும்பட இயக்குநர் ராஜசேகர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தனக்கு நியாயம் கிடைக்கும் வரை சர்கார் படத்திற்கு ரெட் கார்டு விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

கத்தியால் சர்காருக்கு வந்த பிரச்சினை

ராஜசேகர் அளித்த மனுவில், “இயக்குநர் முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் உதவி இயக்குநர் வாய்ப்பு வேண்டுவோர் தங்களின் விவரங்களை அனுப்பலாம் என்று கடந்த 30.06.2013 அன்று குறிப்பிட்டிருந்தார். அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் எனது தாகபூமி குறும்பட விவரங்களை அனுப்பி வைத்தேன். அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. பின்னர் நான் பலே, தாழ்ப்பாள் உள்ளிட்ட குறும்படங்களை இயக்கினேன். அதே நேரத்தில் தாகபூமி குறும்படத்தை படமாக இயக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்தேன். இந்நிலையில் தாகபூமி குறும்படத்தைத் திருடி எனது அனுமதியில்லாமல் கத்தி திரைப்படமாக இயக்குநர் முருகதாஸ் எடுத்துவிட்டார். அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த நான் படக்குழுவில் உள்ள தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவரிடமும் நியாயம் கேட்டேன். பதில் எதுவும் வரவில்லை. பிறகு எனது வழக்கறிஞர் மூலம் முருகதாஸ், விஜய், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பாளர்களான சுபாஸ்கரன், கருணாமூர்த்தி ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கேட்டேன். லைக்கா நிறுவனத் தயாரிப்பாளர்களிடமிருந்து எனக்கு பதில் வந்தது. ஆனால் முருகதாஸிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

பின்பு காப்புரிமை சட்டத்தின்படி தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கு 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதே வழக்கு தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வாறு நீதிமன்றத்திற்கும் வீட்டிற்கும் அலைந்து 4 ஆண்டுகளை இழந்திருக்கிறேன். எனது உழைப்பைத் திருடியது மட்டுமில்லாமல் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தி மிகுந்த மன உளைச்சலுக்கு முருகதாஸ் என்னை ஆளாக்கியுள்ளார். எனவே எனது பக்கம் உள்ள நியாயத்தின் அடிப்படையிலும் எனக்கு நியாயம் கிடைக்கும் வரை சர்கார் திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்குமாறு (ரெட் கார்டு) கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கத்தி திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று கே.ரங்கராஜ் என்பவரும் வழக்கு தொடர்ந்துள்ளார். தனக்கு பணமோ, கிரெடிட்டோ தராமல் படத்தை வெளியிட்டதாகப் புகார் கூறினார். தெலுங்கு ரீமேக் உரிமையை விற்றது போல் மற்ற மொழிக்கான ரீமேக் உரிமைகளை விற்பதற்குள் தனக்குரிய நிவாரணத்தைப் பெற்றுத்தரவேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணை நாளை மறு நாள் (அக்டோபர் 31) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.