லீனாவுக்கு ஆதரவாக அமலா பால்: சுசி ரியாக்‌ஷன்!

சுசி கணேசனுக்கு எதிராக இயக்குநர் லீனா மணிமேகலை பாலியல் புகார் அளித்தது திரைத்துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. லீனாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் பகிரப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் நடிகை அமலா பால், லீனா மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்திருப்பதோடு சுசி கணேசன் மீது பாலியல் புகாரும் அளித்துள்ளார்.
இது குறித்து அமலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இயக்குநர் சுசி கணேசன் மீதான லீனா மணிமேகலையின் குற்றச்சாட்டை நான் ஆதரிக்கிறேன். பெண்ணியத்துக்கு சிறிதளவும் மரியாதை தரத் தெரியாத ஒரு மனிதரிடம், துணை இயக்குநராகப் பணிபுரிந்த அந்தப் பெண் என்ன பாடுபட்டிருப்பார் என்பது எனக்குப் புரிகிறது.
சுசி கணேசன் இயக்கிய ‘திருட்டுப் பயலே 2’ படத்தின் நாயகியாக நான் இருந்தாலும், அவரின் இரட்டை அர்த்தம் தொனித்த பேச்சு, முகம் தெரியாத யாருக்கோ அவர் கூறும் பரிந்துரைகள், காரணம் இல்லாமல் உடலை ஒட்டி உரசும் மனப்பான்மை எனப் பல்வேறு சங்கடங்களை நான் சந்தித்திருக்கிறேன்.
இதை வைத்தே லீனா மணிமேகலை என்ன பிரச்சினைகளை எதிர்கொண்டிருப்பார் என்பதை நான் அறிகிறேன். இந்தக் கொடுமையை, சமூக வலைதளங்கள் மூலம் அவர் வெளியில் சொல்லியிருப்பதற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.
இன்றைய பொருளாதார நிலையும், பெருகிவரும் வேலைக்கென்று வரும் பெண்களின் தொகையும் பெண்களை எளிய இரையாக்கிவிடுகிறது. அங்கிங்கெனாதபடி, அனைத்துத் தொழில்களிலும் துறைகளிலும் இந்தக் கொடுமை நடந்து வருகிறது.
தங்களது மனைவியையும் மகள்களையும் போற்றிக் காப்பாற்றும் இதே ஆண் சமுதாயம், வெளியே மற்ற பெண்களிடம் தங்களது ஆதிக்க மனப்பான்மையைச் செலுத்துவது துரதிர்ஷ்டவசமானது.
இதுவே இந்தியர்களாகிய நாம், நம்முடைய உண்மையான ஆற்றலை கலை, சேவை மற்றும் ஆன்மிகத் துறைகளில் வெளிப்படுத்தும் தன்மையை ஊனமாக்குகிறது.
ஆன்மிகத் துறையிலும், கலைத் துறையிலும் இருந்து பல உண்மைகள் வெளிவரத் தொடங்கிவிட்டன. இதேபோல மற்ற துறைகளிலும், குறிப்பாக அங்கீகரிக்கப்படாத மற்ற துறைகளில் இருந்தும் #MeToo குறித்த பதிவுகள் வெளிவர வேண்டும்.
அரசாங்கமும் நீதித்துறையும் எதிர்காலத்தில் இவ்விதக் கொடுமைகள் நடக்காமல் இருக்க வேண்டி, பெண்களுக்குத் தொழில் பாதுகாப்பு உள்ளிட்டப் பல அம்சங்களைச் சட்ட ரீதியாக அமல்படுத்த வேண்டும். அவ்விதமான கட்டுப்பாடுகளே பெண்களைப் போகப்பொருளாகச் சித்தரிக்கும் சிலருக்கு எச்சரிக்கை மணியாகும்” என்று தெரிவித்துள்ளார் அமலாபால்.
இத்தகவலை அமலா ட்விட்டரில் பகிர்ந்த பின் தன்னை சுசி கணேசன் தொலைபேசியில் தொடர்புகொண்டு திட்டியதாக மீண்டும் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார் அமலாபால்.
அதில், “என் வாழ்க்கையில் மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் தற்போது நடந்திருக்கிறது. சற்று முன்னர் இயக்குநர் சுசி கணேசனும், அவரின் மனைவி மஞ்சரியும் என்னைத் தொடர்புகொண்டார்கள். என்னுடைய நிலைப்பாட்டை விளக்குவதற்காக நான் அந்த அழைப்புக்குப் பதிலளித்தேன். அவர் மனைவிக்கு நான் விளக்கம் அளித்துக்கொண்டிருக்கும்போதே போனைப் பிடுங்கிய சுசி கணேசன் என்னை அசிங்கமாகத் திட்டத் தொடங்கினார். நடப்பதை என்னால் நம்பமுடியவில்லை. அவரின் மனைவி சிரிப்பது எனக்குக் கேட்டது. பின்னர் இருவரும் என்னைத் தரக்குறைவாகப் பேசினார்கள். என்னைப் பயமுறுத்த நினைக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.