நுவரெலியாவில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்குமாறு கோரி நுவரெலியா- மஸ்கெலியா, மொக்கா மற்றும் காட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
குறித்த தோட்ட காரியாலயத்திற்கு முன்பாக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர். இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் கூறுகையில்,
“தோட்ட தொழிலாளர்களை தொடர்ச்சியாக ஏமாற்றாமல் நியாயமான சம்பளத்தினை பெற்று தரவேண்டுமெனவும், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்கள் உரிய முறையில் பேச்சுவார்த்தையினை நடாத்தி ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளமாக பெற்று தரவேண்டும்.
மேலும் ஏனைய துறையினர்களுக்கு சம்பளத்தை அதிகரித்து கொடுக்கும் இந்த அரசாங்கம், ஏன் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் மாத்திரம் புறக்கணிப்பு செய்து வருகின்றது.
ஆதலால் எமது பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்று தராவிடின் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்” என  ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தோட்ட தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த  ஆர்ப்பாட்டத்தில் 500ற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள்  கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.