கடலூர் மத்திய சிறையில் பலத்த பாதுகாப்பு!

ஐஎஸ் அமைப்பு, கடலூர் மத்திய சிறையை தகர்த்து கைதியை கடத்தப்போவதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து, கடலூர் மத்திய சிறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சிரியாவில் செயல்படும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக சென்னையில் வசித்து வரும் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த அன்சர் மீரான் என்பவரை கடந்த பிப்ரவரி மாதம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.

இதையடுத்து அவர் பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், புழல் சிறையில் கைதிகள் டிவி, செல்போன் போன்ற வசதிகளுடன் சொகுசாக வாழ்வதாக புகைப்படங்கள் வெளியானது. இந்த சம்பவத்துக்கு பிறகு அன்சர்மீரான் புழல் சிறையிலிருந்து கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

இதனால், சிறையை தகர்த்து அன்சர் மீரானை கடத்த இருப்பதாக மத்திய உளவுத்துறையினர் தமிழக சிறைத்துறைக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

திருச்சி சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் நேற்று(செப்டம்பர் 30) மாலை கடலூர் மத்திய சிறைக்கு வந்து சிறைக் காவலர்களுடன் அதிரடி சோதனை செய்தார். பாதுகாப்புக்காக கடலூர் மாவட்ட ஆயுதப்படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் பகுதியை சுற்றிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நாளை மறுநாள்(அக்டோபர் 3) அன்சரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதால், அதுவரை காவல் நீடிக்கும் எனக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.